மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமியினுடய ஜாமீன் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களுடனும், ஆதிவாசி மக்களுடனும் மக்கள் பணி ஆற்றி வரும் மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி. அவருக்கு வயது இப்பொழுது 83. அவரை 2018 பீமாகோரேகான் வழக்கில், அதில் சம்பந்தமே இல்லாத மனித உரிமை ஆர்வலர்களான கவிஞர் வரவரராவ், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே என வரிசையாக 15க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அரசு சிறையில் அடைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியில் தேசிய புலனாய்வு அமைப்பு ஸ்டேன் சாமி அவர்களையும் கைது செய்து அக். 9ந் தேதி மும்பை சிறையில் அடைத்தது.
வயது மூப்பின் காரணமாக ஸ்டேன்சாமி அவர்களுக்கு நடுக்கவாத நோய் (Parkinson
Disease) இருக்கிறது. அவரால், ஒரு குவளையில் தண்ணீர் குடிக்க முடியாத நிலை இருக்கிறது.
தண்ணீரை உறிஞ்சி குடிப்பதற்கு உறிஞ்சி குவளையும், உறிஞ்சி குழலும் கேட்டதற்கு, அவரை
கைது செய்யும் பொழுது நாங்கள் கைப்பற்றவில்லை என திமிராக பதில் சொல்லியது. ஊரே காறித்துப்பிய
பிறகு, 20 நாட்கள் கழித்து உறிஞ்சி குடிப்பதற்கான பொருட்களை வழங்கினர்.
இப்பொழுது அவருக்கு சிறையில் தன்னுடன் இருக்கும் பிற மனித உரிமை ஆர்வலர்களும்,
உடன் இருக்கும் சிறை கைதிகள் தான் உதவிவருகிறார்கள். அவருக்கு இரண்டு காதுகளும் கேட்கும்
திறனை இழந்துவிட்டதாலும், சிறையில் பலமுறை நடுக்கவாத நோயால் கீழே விழுந்துவிட்டதாலும்,
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடுமையான வலி இருப்பதாலும், அவருக்கு உடனடியாக
மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த காரணங்களை
முன்வைத்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால்
அவருக்கு மனித உரிமைகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துவரும் மத்திய அரசு, அதற்கு ஒத்து
ஊதும் நீதிமன்றமும் அவருடைய ஜாமீனை மீண்டும் மறுத்திருக்கிறார்கள். மத கலவரங்களை தூண்டிவிட்டு காவு வாங்கியவர்கள்,
கேடிகள், கிரிமினல்கள், பாலியல் குற்றவாளிகள் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்
மனித உரிமை ஆர்வலர்கள், மக்களை நேசிப்பவர்கள் எல்லாம் சிறையில் தான் இருக்கவேண்டியிருக்கும்.
ஸ்டேன் சாமி உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்களின் கைதை கண்டித்தும், விடுதலை செய்ய
சொல்லியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாம் தொடர்ந்து போராடுவோம்.
-சாக்ரடீஸ்
Comments
Post a Comment