சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் ! பாகம் -2



மகாராஷ்ட்ராவில், முதலமைச்சர் சுசில் குமார் ஷிண்டே,  சாவர்க்கர் குறித்த ஐயரின் விமர்சனங்களுக்கு எதிராகக் கோபத்துடன் எதிர்வினையாற்றியது மட்டுமல்ல, மற்றொரு  காங்கிரஸ் தலைவரான ஆர்.அதிக், சாவர்க்கரைப் புகழ்ந்து,  கையெழுத்துடன்கூடிய முகப்புக் கட்டுரை ஒன்றையே சிவ சேனா  இதழான சாம்னா (Saamna)வில் எழுதினார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும்  இணைந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். வீர் சங்வியின்  கூற்றுப்படி, “காங்கிரசின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கும்  எவருக்கும், ஏன், அடிப்படை மதச்சார்பின்மைக் கொள்கையை  ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், வீர் சாவர்க்கரை வணங்குவது  கடினம். காங்கிரசார் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவ சேனை ஆகியவற்றின் சித்தாந்தங்களோடு ஒத்துப்போகவில்லை எனினும்,  திடீரென்று சாவர்க்கரை துதிபாடத் தொடங்கியிருக்கிறார்கள்.”  விடுதலைப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு நபர்  மட்டுமல்ல; காந்தியைக் கொல்வதற்குக் கருவியாகவும் இருந்த ஒரு நபருக்கு ஆதரவாக காங்கிரசார் குரல் கொடுப்பது மிகவும்  கொடுமையாகும். 

இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு,  வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி  உறுப்பினர்கள் முஸ்லிம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-உடனோ எவ்விதமான தொடர்பும்  வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக் கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்  தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

இவ்வாறு பாசிஸ்ட் மற்றும் பிளவுவாதச் சித்தாந்தங்களுக்கு  எதிராக சவால்விடக்கூடிய விதத்தில் செயல்பட்ட மறக்கமுடியாத  பாரம்பர்யங்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் இன்றைய  தலைமை தன்னுடைய பிரகாசமான கடந்த காலத்தை மறந்துவிட்டு,  செயல்பட்டுக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். இந்தக்  காரணத்தால்தான் சாவர்க்கர்வாதிகள், ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக  இந்தியாவை எந்தக் காலத்திலுமே விரும்பாத சாவர்க்கர்  போன்றவர்களின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும்  இணைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தின் மகத்தான ஜனநாயக, மதச்சார்பற்ற பாரம்பர்யத்தைக் குழப்புவதில் வெற்றி  பெற்றிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதிய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும்  உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர்  இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்”1 என்று வீர சாவர்க்கரைப்  போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார். மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.

இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது  பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர  மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று  வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு  அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு  அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார்.3 விஷயம்  இத்துடன் முடிந்துவிடவில்லை. பா.ஜ.க.-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், சாவர்க்கரின்  நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய சகாவாக விளங்கியவரும்,  தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்குத்  தண்டனை விதிக்கப்பட்டவருமான நாதுராம் கோட்சேயையும்  போற்றிப் புகழ வேண்டும் என்கிற அளவிற்குப் பேசியுள்ளனர்.  கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக  முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு  தேசியவாதி என நம்புகிறேன். மகாத்மா காந்தியும் நாட்டிற்காக  ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக  இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்.”

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா  உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள்  வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர்  என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள்?  அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட  எழுதிய எழுத்துகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலே, அவர்  குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட  முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று  உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும்.  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர்,  இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்திய அரசாங்கத்தின்  ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாகச் சார்ந்திருக்கிறார். செல்லுலர் சிறையில் சாவர்க்கருடன்  இருந்த புரட்சியாளர்களின் நினைவுக்குறிப்புகளும் மாபெரும்  தகவல் களஞ்சியங்களாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

சாவர்க்கரின் தேச விரோதப் பண்பு 1963இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சாவர்க்கரின் தொகுப்பு நூல்கள் மற்றும்  சமக்ரா சாவர்க்கர் வாங்மாயா:இந்து ராஷ்ட்ரா தர்ஷன் (Samagra  Savarkar Wangmaya:Hinduj Rashtra Darshan) (Collected Works  of Savarkar in English published in 1963) மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சூறாவளிப் பிரச்சாரம்: 1937 டிசம்பர்  முதல் 1941 அக்டோபர் வரையிலும் அவருடைய பிரச்சாரப்  பயணங்கள் – நேர்காணல்களின் தலைவரின் நாட்குறிப்பிலிருந்து  எடுக்கப்பட்ட சாராம்சங்கள் (Vinayak Damodar Savarkar’s  Whirlwind Propaganda:Extracts from the President’s Diary of  his Propagandist Tours Interviews from December 1937 to October 1941) ஆகியவற்றில் நன்கு வெளிப்படுகின்றன. இவற்றை இந்து மகா சபா வெளியிட்டிருக்கிறது. இரண்டாவது புத்தகம்  முக்கியமாக உண்மையான சாவர்க்கரை அறிந்துகொள்ள மிகவும்  முக்கியமான ஒன்றாகும். இது 1941இல் வெளியாகி இருக்கிறது.  இதனை சாவர்க்கரின் நெருங்கிய சகாவாக விளங்கிய ஏ.எஸ். பிதே (A.S.Bhide) தொகுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் கூறப்பட்டிருப்பதாவது:  “இந்தப் புத்தகமானது, இன்றைய தினம் இந்துக்கள் இயக்கத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும்போது  பொதுவாகவும், இந்து மகாசபா இயக்கத்தின் தலைவர்கள்,  பிரச்சாரகர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் குறிப்பாகவும்  எ திர்கொள்கிற பல்வேறுபட்ட பிரச்சனைகள் மற்றும்  கேள்விகளுக்கு விடையளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிற அதிகாரபூர்வமானதும் நம்பிக்கைக்குரியதுமான வழிகாட்டியாகும்.”

இந்தப் புத்தகத்தை இந்து மகா சபாவின் ஒவ்வொரு கிளையும்  முன்னணி ஊழியர்களின் அரசியல் கல்விக்காக மட்டுமல்ல;  பல்வேறு பிரச்சனைகளின்மீது தீர்மானகரமான நிலைப்பாட்டினை மேற்கொள்வதற்கு உதவும் விதத்திலும் இதனைக் கட்டாயமாக  வைத்திருக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கரின்  பங்களிப்பை உண்மையிலேயே மேதைமை மிகுந்ததாக ,  இந்துத்துவா அணியினர் நினைத்தார்கள் என்றால் அவர்கள்  இந்தப் புத்தகத்தை இப்போது மக்கள் மத்தியில் வெளியிட்டால்,  மக்கள் சாவர்க்கர் யார் என்பதை அவர் மூலமாகவே நன்கு  தெரிந்துகொள்ள முடியும்.

தொடரும்....

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.