வரி உயரும்.., விலை உயரும்.., கோல் உயரும்.., குடி உயருமா..?
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மைய அரசு வரி வசூல் பற்றிய இலக்கை வெளியிடும். இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி இந்த விவரங்கள் வெளியடப்பட்டது.
கடந்த ஆண்டை விட கார்ப்பரேட் வரி (2.35 லட்சம் கோடி), வருமான வரி (1.79 லட்சம் கோடி), ஜிஎஸ்டி (1.75 லட்சம் கோடி) என எல்லா வரிகளும் குறைவாகவே வசூல் ஆகுமென கணக்கிடபட்டுள்ளது. ஆனால் கலால் வரி மட்டும் 94000 கோடி கூடுதலாக வசூலாகுமென கணக்கிடபட்டுள்ளது. மற்ற வரிகளின் வசூல் குறைகிறது. கலால் வரி வசூல் மட்டும் எப்படி கூடும்?
2020 பிப்ரவரி மாதத்தில் கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை 53 டாலராக இருந்தது. உலக அளவில் உற்பத்தி குறைந்ததால் ஏப்ரலில் வெறும் 1 டாலருக்கு விழுந்தது. டிசம்பரில் 47 டாலரை எட்டியது.
ஆனால் பெட்ரோல், டீசல் விலையோ இது போல குறையவில்லை, கிட்டதட்ட அதே விலை தான் நீடித்தது. சென்னையில் மார்ச் மாதத்தில் 72 ரூபாய் தொட்டு, பின்னர் தொடர்ந்து உயர்ந்து இப்போது 92 ரூபாய் தொட்டுவிட்டது. சில ஊர்களில் சதம் அடித்துவிட்டது.
இதற்கு காரணம் என்ன? கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கலால் வரி குறைக்கப்படவில்லை. அப்படி நம்மிடம் பிடுங்கித்தான் கலால் வரி 3.61 லட்சம் கோடி தொட்டது. இவ்வாறு வேலையிழப்பு, வருமான இழப்பு என திண்டாடிய மக்களின்மீது வரி வேட்டை நடத்திய மைய அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு அளித்த வரிச்சலுகையை திரும்பபெறவில்லை.
கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, பிற சலுகை தருவதன் மூலம் முதலீடுகள், தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு, மக்கள் வாழ்வாதாரம் எல்லாம் உயரும் என கதை விட்டது. ஆனால் உயர்ந்தது என்னவோ பெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் மட்டுமே (பத்து மாதத்தில் 35% அதிகரித்துள்ளது - Oxfam அறிக்கை).
நமக்கு கிடைத்தது? பெட்ரோல், டீசல், எரிவாயு அது தொடர்ந்து பிற பொருட்கள் என ஒட்டுமொத்தமாக விலைவாசி உயர்ந்தது.
இந்த ஆண்டிற்கான மறைமுக வரிகலான ஜிஎஸ்டி(6.3 லட்சம் கோடி), கலால் வரி (3.35 லட்சம் கோடி) ஆகியற்றுக்கு இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மறைமுக வரிகளைக் கட்டப் போவது நாம்.
மேலும் பெட்ரோல் மீது 4 ரூபாய், டீசல் மீது 2 ரூபாய் என கூடுதல் செஸ் வரியும் வசூலிக்கப்படவுள்ளதென பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு விலைகள் புது உச்சங்களை தொடும். மக்கள் வாழ்க்கைத்தரம் கீழே விழும்.
இளையராஜா
Comments
Post a Comment