உறுதி கொள்!
சுவாசிக்க காற்றில்லாமல் நெஞ்சு வெடித்து சாகிறார்கள்.
எரிக்க காசில்லாமல் ஆற்றோடு போகிறார்கள்.
பிணங்களை நாய்கள் தின்கின்றன. மனிதர்களை அரசு ……..
வாருங்கள்! இது தான் உத்தரப் பிரதேசம்.
சுவாசிக்க முடியாத தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்ட பேரன் மீது வழக்கு தொடுக்கிறது. ஆக்சிஜன் இல்லை என்பதை சொன்ன மருத்துவமனையில் ரெய்டு நடத்துகிறது. மக்களின் உயிரைக் காப்பதைத் தவிர மற்ற அனைத்தையும் செய்கிறது. இது தான் உத்தரப் பிரதேச அரசு.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்க எந்த உருப்படியான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை. மருந்துகள் இல்லை. ஆனால் கொரோனா பரவலுக்கு மருத்துவர்கள் காரணம் என குற்றஞ்சாட்டுகிறது. ஆய்வுக் கூட்டங்கள் என்ற பெயரில் மருத்துவர்களை சித்திரவதை செய்கிறார்கள் அதிகாரிகள்.
அரசின் கொடுமைகளுக்கு எதிராக மருத்துவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். உன்னாவோ மாவட்டத்தில் 16 அரசு மருத்துவர்கள் நேற்று ராஜினாமா செய்துள்ளார்கள்.
இவர்களில் 11 பேர் கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். தங்கள் ராஜினாமாவிற்கு காரணம் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைதான் என அறிவித்து இருக்கிறார்கள். தாங்கள் ராஜினாமா செய்தாலும் கொரோனா சிகிச்சையைத் தொடர்ந்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இவர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் அதிகார வர்க்கம் பணிந்தது. மருத்துவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது.
பேச்சு வார்த்தை வெற்றி பெறலாம். அல்லது நாடகமாக இருக்கலாம். இந்த 16 மருத்துவர்கள் மீது பின்னர் தாக்குதல்கள் கூட நடைபெறலாம். ஆனால், பாசிச அரசை இப்போதைக்கு பணிய வைத்திருக்கிறார்கள். அந்த 16 மருத்துவர்களின் நெஞ்சுறுதியைப் பாராட்டுவோம். அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்.
- சார்லி

Comments
Post a Comment