செப்டம்பர் 17:மனுதர்ம, வேத, ஆகம எரிப்பு போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டும்!

 


“பார்ப்பனியமே இந்து மதம், சாதியமே அதன் உயிர் நாடி” என்பதால்தான் சாதி ரீதியாக இந்து மதம் உருவாக்கி வைத்திருக்கும் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகக் கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கும் எந்த அம்சத்தையும், பார்ப்பன இந்து மத வெறியர்கள், பார்ப்பனர்கள், அவர்களின் அடிமைகளாக செயல்படும் கருப்பு பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

பார்ப்பன இந்து மதம் படிநிலை சாதி அடுக்குகளால் கட்டப்பட்டுள்ளது என்று தோலுரித்தார் டாக்டர் அம்பேத்கர். ஒவ்வொரு வர்ணமும், அந்த வர்ணத்துக்கு உட்பட்ட சாதியும் அல்லது அதன் உட்சாதிகளும் இணைந்த தனித்தனி அடுக்குகள் படிப்படியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் இந்திய சமூக அமைப்பின் தனிச்சிறப்பான அம்சமாகும்.

பிற அடுக்குகளில். அதாவது, பிற வர்ணத்திற்குரிய சாதிகளில் எந்த சிக்கல் ஏற்பட்டாலும், அவர்களின் மீது கொலை உள்ளிட்ட எத்தகைய தாக்குதல் நிகழ்ந்தாலும், பிற அடுக்குகளில் உள்ளவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. இதுதான் பொதுவாக இந்துக்களின் மனோபாவமாக உள்ளது.

மனுதர்மம், வேதம், ஆகமம், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் எண்ணற்ற வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் சூத்திர, பஞ்சம சாதிகளை இயல்பாகவே இழிவுபடுத்துகிறது.

பார்ப்பன (இந்து) மதத்தில் காலில் பிறந்தவர்கள், உடல் உறுப்புக்கு வெளியில் பிறந்தவர்கள் என இழிவுபடுத்தப்படும் பெரும்பான்மை மக்கள், இந்த இழிவுகளை சுமந்து கொண்டு அன்றாடம் வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.

ஒரே ஊரில் வசிக்கின்ற மக்களிடையே, சேரியில் உள்ள ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுக்கு ஊர் தெருவின் சுடுகாட்டில் புதைப்பதற்கு இடமில்லை. ஊர் தெரு வழியாக செல்வதற்கும் அனுமதி இல்லை.

ஒரே கல்லூரியில் படிக்கும் இரண்டு வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் மனம் விட்டு பேசி, தனது திருமண இணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வழியில்லை. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிக்கேற்ப தனது இணையை தேர்ந்தெடுக்கும் அவல நிலை பெண்களின் மீது கொடூரமாக திணிக்கப்படுகிறது.

சாதி அமைப்பு. அதாவது, இரத்த உறவுகளுக்கு வெளியில் ஒருவர் மணமுடிப்பதைத் தடுக்கும் அகநிலை சாதி அமைப்பு, இயல்பாகவே மூளையிலிருந்து உடல் வரை புகுத்தப்பட்டுள்ளது என்பதால் இந்து என சொல்லிக் கொள்பவர்களிடம் இங்கே பழக்கவழக்கமாகவும் வாழ்க்கை நடைமுறையாகவும் மாறிவிடுகிறது.

இந்தியாவில் இன்னமும் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இரட்டைக்குவளைமுறை அமுல்படுத்தப்படுகிறது, தனி சுடுகாடு, தனிக் கிணறு, தனி குடியிருப்பு என இன்றளவும் பெரும்பான்மை மக்கள் பிரித்து வைக்கப்படுகின்றனர். இவை சட்டப்படியே சமூகத்தில் நடைமுறையாகி, அமலாகி கொண்டிருக்கிறது.

எந்த வகையில் உயர்கல்வி படித்தாலும் அல்லது உயர் கல்வி படிக்கின்ற போதும். பிறப்பின் அடிப்படையிலான சாதி தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து, பல்கலைக்கழகங்களில் ரோஹித் வெமுலாக்கள் உயிர் பலியாகின்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் துவங்கி பொதுத்துறை நிறுவனங்கள் வரை, இட ஒதுக்கீடு என்பது அமுலில் இருந்தாலும், வேலையில் சேர்வது முதல் பதவி உயர்வு வரை, அனைத்திலும் சாதி பாகுபாடு என்ற முறையில் அடக்குமுறை நீடிக்கிறது.

ஏன் சமூகத்தைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு தீர்ப்பு எழுதுகின்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் கூட இட ஒதுக்கீடு சாதிய ரீதியிலான பாகுபாடு, இழிவுபடுத்தப்படுதல் போன்ற அனைத்தும் பட்டவர்த்தனமாக வெளியில் தெரிகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படும் ஊடகங்களில், பிறப்பால் மேல் சாதிகளான பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதும், சூத்திர பஞ்சம சாதிகளை சேர்ந்தவர்கள் சாதாரண எடுபுடி வேலைகளில் துவங்கி மூன்றாம்தர, நான்காம் தர எழுத்தாளர்களாக ஒதுக்கி வைக்கப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மாஸ் மீடியா என அழைக்கப்படும் திரைப்படத்துறையில் நடிகர்கள் துவங்கி, கதாசிரியர்கள் இயக்குனர்கள் வரை சாதி ரீதியாக இழிவுபடுத்தப்படுவதும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளது.

இத்தனைக்கும் பிறகும் மனு தர்மம், வேதம், ஆகமம் போன்றவை அனைத்தும் புனிதமானவை என கூச்சல் இடுவதற்கு பார்ப்பன கும்பலால் முடிகிறது. அதை அடி பணிந்து, பார்ப்பன அடிமைகளான கருப்பு பார்ப்பனர்கள் கூச்சல் இடுவதும், தொடையை தட்டுவதும், கோதாவில் குதிப்பதற்கு தயாராக இருப்பதாக மிரட்டுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து விட்டால் அது ஒன்றும் வேத வாக்கு கிடையாது. ஏனென்றால், பல சமயங்களில் ஒரு நீதிபதி கொடுத்த தீர்ப்பை மற்றொரு நீதிபதி மறுப்பதும், இரு நபர் விசாரணை எனும் பெயரில் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்குவதும், அதற்கும் மேல் ஐந்து நபர் கொண்ட பெஞ்ச் அதை முற்றாக புறக்கணிப்பதும் என்றெல்லாம் பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்த நாளில் திருச்சி மற்றும் சென்னையில் மக்கள் அதிகாரம் அறிவித்துள்ள மனுதர்ம, வேத, ஆகம எரிப்பு போராட்டத்தை சட்டரீதியாக தடுப்பதற்கு பார்ப்பன கும்பல் சண்டமாருதம் செய்கிறது. தான் போட்டிருக்கும் பூணூல், வைத்திருக்கும் குடுமி இயல்பாகப் பிறரை இழிவு படுத்துகிறது என அவர்கள் ஒரு போதும் உணர்வதில்லை.

அதற்கு எதிராக சமூகத்தில் கேள்வி எழும்போதெல்லாம் தனது மனம் பதை பதைப்பதை மறைத்து விட்டு, இந்துக்களின் மனம் புண்படுகிறது என பித்தலாட்டத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் மூலமும், சமூக வலைதளங்களின் மூலமாகவும், மக்கள் அதிகாரம் பிரச்சாரம் செய்து வருகிறது. அதை கண்டு பார்ப்பனர் அல்லாத சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த, எந்த சொல்லிக் கொள்ளப்படும் இந்துவிற்கும் மனம் பதை பதைக்கவில்லை.

ஆனால், ஸ்ரீரங்கத்தின் நரசிம்மையர்களுக்கு மட்டும் மனம் பதைக்கிறது. நீதிமன்றங்களுக்கும் குளிர்சாதனத்தை மீறி உடல் வியர்க்கிறது.

இந்த அச்சம் தோற்றுவித்திருக்கும் சூழல் இந்திய பொருள்முதல்வாத பார்ப்பன எதிர்ப்பு மரபின் தொடர்ச்சியாக இருக்கட்டும். காவி பாசிசத்திற்கு எதிரான மக்கள் அதிகாரத்தின் போராட்டம், கார்ப்பரேட்டுகளை அதன் சுரண்டல் கொள்ளையிலிருந்து தடுத்து நிறுத்துவதற்கான உத்வேகத்தை பெறுவதற்கு தூண்டுகோலாக அமையட்டும்.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் மறுகாலனியாக்க வேட்டைக்காடாக நாடு மாறுவதை தடுக்கும் மக்கள்திரள் எழுச்சிக்கு முன்னோடியாக செப்டம்பர் 17 அமையட்டும்.

வவுனியன்.


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.