நாட்டிற்கு தேவை கலகக்கார பெரியார்!

செப்டம்பர் 17 பெரியாரின் 114வது பிறந்த தினத்தை தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், பெரியார் சிந்தனையாளர்கள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதைப் போல கொண்டாடினர்.

தமிழகத்தை ஆளும் திமுக திருச்சி அருகில் உள்ள சிறுகனூரில், தந்தை பெரியார் உலகம் அமைவதற்கு அடிக்கல் நாட்டி பெரியார் பிறந்த நாளை கொண்டாடியது. அதுமட்டுமின்றி, தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் உறுதிமொழி ஏற்கும் தினமாகவும் மாற்றியுள்ளது.

ஆனால், மக்கள் அதிகாரம் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த தினத்தை கிளர்ச்சிகரமான நாளாக அறிவித்தது. பெரியார் என்றால் பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, திராவிட பாரம்பரியத்தின் அடையாளம் போன்ற அனைத்தையும் தாண்டி, கலகக்கார பெரியாராக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை மக்கள் அதிகாரம் உணர்த்தியது.

இந்திய சமூக அமைப்பை செல்லரித்து தின்று கொண்டிருக்கும் சாதிய, வர்ணாசிரம கட்டமைப்பை அடித்து நொறுக்குகின்ற வகையில் அதற்கு சட்டப்படி அங்கீகாரம் கொடுக்கின்ற மனுதர்மம் மற்றும் வேதம், ஆகமங்கள் ஆகியவற்றை கொளுத்துகின்ற போராட்டத்தை அறிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதை போல கொண்டாடாமல் இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் கலகக்கார பெரியாரை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தில் நாடு உள்ளது.

ஏனென்றால், நாடு தழுவிய அளவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவெறுப்பு மற்றும் நாட்டின் பூர்வ குடிமக்களான தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு கடும் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது.

ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் மறுகாலனியாக நாடு சுரண்டப்படுவதற்கும், வேட்டையாடப்படுவதற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்ற இந்திய வகைப்பட்ட பாசிசமாக கார்ப்பரேட்-காவி பாசிசம் இந்திய மக்களின் மீது ஏறி தாக்கி வருகிறது.700 பக்கம் கொண்ட மனுதர்மம் இந்தியாவின் அரசியல் சட்டமாக மாறப்போகிறது என பகிரங்கமாக அறிவித்து வேலை செய்கிறது ஆர்எஸ்எஸ்.

டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்டு, சாதி-தீண்டாமை கொடுமைகளையும், பிறப்பின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி பார்க்கும் இழிவான சமூக அமைப்பை நியாயப்படுத்துகின்ற வர்ணாசிரமக் கொள்கையையும் உயர்த்திப் பிடிக்கின்ற சனாதன இந்தியா இன்று பாசிச இந்தியாவாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக இந்திய உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்டுவதற்கு கலகக்கார பெரியார் இன்று அவசியப்படுகிறார்.

கம்யூனிஸ்டுகள் என்றாலே இழப்பு, தியாகத்திற்கு அஞ்சாமல் போரிடுவதுதான் இயல்பு. ஆனால், இது போன்ற போராட்ட வழிமுறைகளை கடைபிடிக்காமல், எந்த சிக்கலும் இல்லாமல் அரங்க கூட்டங்கள், நடத்துவது தெருமுனை கூட்டம் நடத்துவது, பெரியார் பெயரில் துண்டறிக்கைகளை விநியோகம் செய்வது போன்ற “சைவ வழிமுறைகள்” எதுவும் பார்ப்பனியத்திற்கு எதிராக, கார்ப்பரேட்-காவி பாசிசத்திற்கு எதிராக ஒரு துரும்பை கூட அசைக்காது என்பது நிதர்சனம்.

மக்கள் அதிகாரம் செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்த நாளில் மனுதர்மம் மற்றும் வேதம், ஆகமம் ஆகியவற்றை கொளுத்துவதை அறிவித்து தமிழகம் முழுவதும் ஒருமாத காலம் வீச்சாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

தனது தலைமை பீடம் அம்பலப்பட்டு நாறுவதைக் கண்டு, மதுரை உயர் நீதிமன்றத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்க சொல்லி ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளான ரங்கராஜன் நரசிம்மையர்கள் மூலம் முயற்சி செய்தது. வழக்கமாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கு பல நாட்கள் ஆகும். ஆனால் பார்ப்பன கும்பலில் மனம் கோணாமல் இருப்பதற்காக ஒரே நாளில் விசாரணையை நடத்தி போராட்டத்திற்கு தடை விதித்தது மதுரை உயர்நீதிமன்றம்.

இதற்கு பதிலடியாக ஒரு இடத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் அறிவித்தது மக்கள் அதிகாரம். தடையை மீறி போராட்டம் செய்தால் கைது செய்து சிறையில் அடைப்போம் என மிரட்டியது திமுகவின் போலீசு. ஒருபுறம் பெரியார் உலகத்தை திறந்து வைத்துக் கொண்டு, மறுபுறம் பெரியார் பிறந்த நாளில் மனுதர்மத்தை எரிப்பதற்கு தடை விதித்து இரட்டை வேடமாடியது ஸ்டாலினின் திமுக அரசு.

ஆனால், தடையை மீறி திருச்சி மற்றும் சென்னையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபை கலகக்காரர் பெரியாரின் போராட்ட குணத்தை மீண்டும் கொண்டு வந்தது.

பெரியார் பற்றி அவரது பகுத்தறிவு, நாத்திக, சுயமரியாதை கருத்துக்களை பல ஆண்டுகளாக நாம் பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். தற்போது, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் தேவை கார்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு பொருத்தமான கலகக்கார பெரியார்தான்.

பெரியாரின் கலக சிந்தனையை உயர்த்திப்பிடிப்போம். கார்ப்பரேட்- காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடி வீழ்த்துகின்ற வரையில், பெரியார் உள்ளிட்ட பார்ப்பன இந்துமத எதிர்ப்பு போராளிகளின் மரபை உயர்த்தி பிடிப்போம். கலகத்தில் இறங்கி நீதியை நிலைநாட்டுவோம்.

வவுனியன்

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.