புதிய வகைப்பட்ட ஆர்எஸ்எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

பாசிசம் குறித்த வரையறையில் பேராசிரியர் பிஜே ஜேம்ஸ் முன்வைக்கின்ற சில அம்சங்களில் நாங்கள் வேறுபடுகிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டை மறு காலனி ஆக்குவதற்கு ஏகாதிபத்திய நிதி மூலதனம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. 

இந்த மறு காலனியாக்கத்தின் தீவிர தன்மையே கார்ப்பரேட்-காவி பாசிசமாக வெளிப்படுகிறது என்று நாங்கள் கருதுகிறோம்.

அதே சமயத்தில் கார்ப்பரேட் பாசிசமும், காவி பாசிசமும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டு ரக பாசிசமாக வெளிப்படுகிறது என்பதே எமது நிலைப்பாடாகும். கார்ப்பரேட்-காவி பாசிசம் பற்றி விளக்கமாக பல்வேறு ஆவணங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம்.

எனினும் பேராசிரியர் பிஜே ஜேம்ஸ் பாசிசம் பற்றி ஆற்றியுள்ள உரை பாசிசத்தை பற்றி புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்கும் அதை எதிர்த்து போராடுவதற்கான பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றை கட்டுவதற்கு தேவையான சித்தாந்த பலத்தை பெறுவதற்கும் உதவும் என்ற நோக்கத்துடன் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.

புதிய வகைப்பட்ட ஆர்எஸ்எஸ் பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

-பேராசிரியர் பி ஜே ஜேம்ஸ்

நன்றி - கீற்று

பின்னணி

இந்தியாவில் அரச அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பிஜேபி, உலகின் மிக நீண்ட ஆண்டுகள் நீடித்திருக்கும், மிகப்பெரிய பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸினுடைய அரசியல் கருவியாகும். ஐரோப்பாவில் பாசிசம் தோன்றிய அதே காலத்தில் 1925 - ஆம் ஆண்டு மனுஸ்மிருதியை தத்துவார்த்த அடிப்படையாக கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் முதல் சர்சங்சல்கா (ஆர்எஸ்எஸ் தலைவர்) ஹெட்கேவாரைக் கொண்டு நிறுவப்பட்டது.

 இந்தியாவைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ் தோன்றிய 1920களின் பத்தாண்டுகளின் காலங்கள் காலனித்துவ ஆட்சிக்கு மட்டுமல்ல,நிலப்பிரபுத்துவ அமைப்புக்கும் பிராமண சாதி அமைப்புக்கும் சவால் விடும் கொந்தளிப்பான ஒன்றாக இருந்தது. தலித்துகள் அதாவது தீண்டத்தகாதவர்கள் பூலேவால் (மகாத்மா பூலே) ஈர்க்கப்பட்டு பின்னர் டாக்டர் அம்பேத்கரின் தலைமையில் இதுவரை அணுக முடியாத நிலையில் இருந்த புறக்கணிக்கப்பட்ட சமூகப் புறங்களில் இருந்து அரசியல் மைய நீரோட்டத்தில் நுழையத் தொடங்கினர். இது உயர்சாதி மேல்தட்டு சாதிய ஆதிக்கத்திற்கு விடப்பட்ட சவாலாக இருந்தது. ஆர்எஸ்எஸ் - ஐ கட்டி அமைப்பதன் மூலம் மீண்டும் தனது சாதி மேலாதிக்கத்தை நிலைநாட்ட பிராமணத் தலைமையை இது தூண்டியது.

 ஆர்எஸ்எஸ் உருவாவதற்கு முன்பு, சாவர்க்கர் என்பவர் ‘இந்துத்துவா’ அல்லது ‘அரசியல் இந்துத்துவம்’ என்பதை (இது இந்து மதத்திலிருந்து வேறுபட்டது) ஆர்எஸ்எஸ் கருத்தியல் பின்னணியாக வகுத்து கொடுத்திருந்தார். சாவர்க்கர் தனது கையெழுத்துப் பிரதியான ‘இந்துத்துவா: யார் இந்து?’ என்பதில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்தியாவில் வாழும் அனைத்து சிறுபான்மையினர்களைத் தவிர்த்து, இந்துக்கள் தங்களுக்கு தாங்களே ஒரு தேசமாக இருக்கிறார்கள் என்று வாதிட்டார். 1940 - இல் ஹெட்கேவார் இறந்த பிறகு, ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டாவது சர்சங்சல்காவாக மாறிய கோல்வால்கர், தீண்டத்தகாதவர்களை அடிபணியச் செய்வதிலும், மத சிறுபான்மையினர்களை குறிப்பாக முஸ்லிம்களை களங்கப்படுத்துவதிலும், ஒழிப்பதிலும் குறியாகக் கொண்ட ஒரு வன்முறை கொண்ட இந்துத்துவா அமைப்பாக ஆர்எஸ்எஸ் – ஐ விரிவுபடுத்தினார்.mohan bagwat and rass leaders பல வரலாற்றாசிரியர்களும், அறிஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஆரம்பத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் ஐரோப்பிய பாசிசத்துடன் (பாரம்பரிய கிளாசிகள் பாசிசம்) நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது. இந்த பாசிசம் ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலி, ஜெர்மனியில் ஐரோப்பா நாடுகளுக்குள் மூண்ட போர்களின் காலத்தில், மாபெரும் ஏகாதிபத்திய அரசியல் - பொருளாதார நெருக்கடியின் பொழுது உருவானது. ஆர்.எஸ்.எஸ் -இன் அக்காலத்திய தலைவர்கள் முசோலினி, ஹிட்லர் போன்ற பாசிச தலைவர்களுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். உதாரணமாக, ஹெட்கேவாரின் வழிகாட்டியும், அரசியல் குருவுமான மூன்ஜே, 1931 - இல் இத்தாலிய பாசிச சர்வாதிகாரி முசோலினியைச் இத்தாலிக்கு சென்று சந்தித்தார். கறுப்புச் சட்டையர்கள் போன்ற துணை இராணுவ போக்கிரி குண்டர்களுக்கு பயிற்சி அளித்த முசோலினியின் பாசிச உடற்கல்வி அகாடமியால் இவர் ஈர்க்கப்பட்டார். அதன் படி 1937 - இல் நாசிக்கில் ‘போன்சாலா இராணுவப் பள்ளியைத்’ தொடங்கினார். மத்திய இந்து இராணுவக் கல்விச் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் இந்துத்துவா குண்டர்களுக்கும் துணை ராணுவப் பயிற்சி அளித்தார்.

 2008 – இல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு உட்பட இந்துத்துவா தீவிரவாத குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் போன்சாலா பள்ளியின் தொடர்புகள் அதிகமாக உள்ளதை ஆதரபூர்வமாக விவாதிக்கப்படுகின்றன. ஹிட்லரைப் போற்றிய கோல்வால்கர், ஹிட்லரின் இனத் தூய்மைக் கோட்பாட்டை நிலைநாட்டுவதை உயர்த்தி பிடித்தார். செமிடிக் இனங்களை, யூதர்களை சுத்திகரிக்கும் ஹிட்லரின் நாஜி முறையை கோல்வால்கர் பாராட்டினார், மேலும் முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவுக்கு இது ஒரு நல்ல பாடமாக எடுத்து செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆர்.எஸ்.எஸ் - இன் அடிப்படை சித்தாந்தம் அல்லது இந்து ராஷ்டிரத்தின் கோட்பாட்டின்படி, ‘இந்துக்கள் , இந்துக்கள் மட்டுமே, இந்திய தேசத்தை உருவாக்குகிறார்கள்’. அதேசமயம் சாதியவாதம் என்பதும் ‘இந்து தேசம்’ என்பதற்கு ஒத்ததாக கோல்வால்கருக்கு இருந்தது.

 வரலாற்றுரீதியாக இந்தியா என்பது பல மதங்கள், பல மொழிகள், பல மரபினங்கள், பன்முக பண்பாடுகள், பல தேசிய இனங்களை உள்ளடக்கியதாக இருந்து வருகிறது. மனிதாபிமானமற்ற சாதி அமைப்பு இந்த அனைத்து அடையாளங்களையும் சிதைக்கிறது. எனினும், ஒரு பாசிச அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ் அதன் தொடக்கத்திலிருந்தே இஸ்லாமிய வெறுப்பு, கிறிஸ்தவ எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, தலித் எதிர்ப்பு, பெண்ணுரிமை எதிர்ப்பு உடையதாக இருக்கிறது. தனது நோக்கங்களை அடைய வன்முறையைப் பயன்படுத்தும் பழக்கம் அதற்கு இருந்தது.

 காலனித்துவ ஒடுக்குமுறையின் கீழ், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கான தேசியவாதம், தேசபக்தி ஆகியவை சாராம்சத்தில் காலனித்துவத்திற்கு எதிரானதாகவே இருந்தன. ஆனால் ஆர்எஸ்எஸ்ஸின் ‘கலாச்சார தேசியம்’ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து துரோகம் செய்வதற்கான மறைப்பாக இருந்தது. முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலை வெறுப்புடன், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தீவிர அடிமைத்தனமும் ஆரம்பத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பின் உடன் பிறந்த இயல்பாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, அது பிரிட்டிஷ் காலனிய காலத்தில் நாட்டில் நடந்த சுதந்திர இயக்கத்துடன் முற்றிலுமாக விலகி கிடந்தது.

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர் மட்டத் தலைமை, ‘ஆங்கிலேயர்களுடன் போரிட்டு தங்கள் ஆற்றலை வீணாக்க வேண்டாம் என்றும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் போன்ற ‘உள் எதிரிகளை’ எதிர்த்துப் போராடுவதற்காக அதைச் சேமித்துக்கொள்ளுங்கள்’ என்றும் அறிவுறுத்தியது. அவ்வாறே இந்த அமைப்பு இந்திய சுதந்திர போராட்ட அரசியலின் வெளி எல்லையில் தொடர்ந்து சுதந்திரம் போராட்ட காலத்தில் நீடித்தது. ஆனால் அரசியலமைப்பு சபை இந்திய அரசியலமைப்பை உருவாக்கும்போது, ஆர்எஸ்எஸ் அந்த அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதை கடுமையாக எதிர்த்தது. அதற்கு பதிலாக 'மனுஸ்மிருதி'யை (பெண்களையும் தலித்துகளையும் மனித பிறவிகளுக்கு கீழானவர்கள் என்று அடையாளம் காட்டும் நால்வர்ண அல்லது வர்ண அமைப்பின் புனித நூல்) அரசிலமைப்பு சட்டமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. உயர்சாதியினரின் நலனுக்கு எதிராக அனைத்து சாதியினருக்கும் சம உரிமை வழங்கும் 1950 - ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை எதிர்த்தது. உண்மையில், இதற்கு முன்பே 1947 ஆகஸ்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊதுகுழலான ‘ஆர்கனைசர்’ இதழ் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்பதற்கு ஆட்சேபம் தெரிவி்த்ததுடன், மூவர்ண தேசியக் கொடியையும் எதிர்த்தது.

 1948 - இல் தேசத் தந்தை காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் சில மாதங்களுக்கு தடை செய்யப்பட்டது. இந்த தடைக்குப் பின்பு ஜூலை 11, 1949 - இல் ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்குவதற்கு சர்தார் வல்லபாய் படேல் முன்வைத்த நிபந்தனைகளில் ஒன்று ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் தேசியக் கொடிக்கும் விசுவாசமாக இருக்க ஆர்எஸ்எஸ் உறுதிமொழி எடுக்க வேண்டும்’ என்பது முக்கியமானதாகும். இருப்பினும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உறுதிமொழியைப் பின்பற்றத் தயாராக இல்லாத ஆர்எஸ்எஸ், 2003 - இல் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சாவர்க்கரின் உருவப்படத்தையும் திறந்து வைத்த வாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில்தான் தேசியக் கொடியை ஏற்றத் தொடங்கியது.

 வெளிப்படையாக, ஏகாதிபத்திய சகாப்தத்தின் உள்நாட்டு யுத்தங்கள் காலத்தில் உருவான ஐரோப்பிய பாசிசத்தைப் போலவே, ஆளும் வர்க்க முறைமையின் உள்ளார்ந்த முரண்பாடுகளின் கூர்மையடைந்ததால், நிதி மூலதன முதலாளிகளினுள் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகளான பாசிஸ்டுகளின் எழுச்சிக்கான சரியான தருணம் உருவாக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நெருக்கடியை சாதாரண கொள்ளை, சுரண்டல் முறைகள் மூலம் தீர்க்க முடியாதபோது, மக்கள் போராட்டங்கள் கட்டுப்படுத்த முடியாததாக மாறும் போது, அரசியல்-பொருளாதார சூழ்நிலை, சமூகப் பதற்றங்கள் போன்றவை பாசிச சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சாதகமாக மாறும்.

 இந்தியாவைப் பொறுத்த வரையில், 1970களின் நெருக்கடியும், இந்திரா காந்தி ஆட்சியின் அவசரநிலைப் பிரகடனமே அதுவரை பிரதான நீரோட்டத்திற்கு வெளியே இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அரசியல் வெளிச்சத்திற்கு கொண்டு வரச் செய்தது. முற்போக்கான-ஜனநாயக மாற்று சக்திகள் இல்லாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் அவசர நிலைக்கு எதிரான இயக்கத்தின் மூலமாக முன்னணிக்கு வருவதற்கான நிலைமையை திறம்பட பயன்படுத்திக் கொண்டது.

 சிறிது காலத்திலேயே, ஜனசங்கத்திற்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ் தனது அரசியல் கருவியாக பாஜகவை கட்டி அமைத்தது, மீதமுள்ள நிகழ்வுகள் சமகால வரலாற்றின் ஒரு பகுதியாகும். நூற்றுக்கணக்கான இரகசிய - வெளிப்படையான, வன்முறைகள் - கலவரங்களைக் கொண்ட, பயங்கரவாத அமைப்புகளை வழிநடத்தி, சந்தர்ப்ப சூழ்நிலை, காலங்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, ஆழப்படுத்தி, அதன் தீவிர வலதுசாரி பொருளாதார தத்துவம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய முகாமின் மீது அசைக்க முடியாத விசுவாசத்துடன், கணக்கற்ற வெளிநாட்டு காவி பயங்கரவாத துணை அமைப்புகளின் தொடர்ச்சியாகவும் அபரிமிதமான கார்ப்பரேட் நிதியுதவியின் துணையுடன் ஆர்எஸ்எஸ் உலகிலேயே மிகப்பெரிய பாசிச அமைப்பாக வளர்ந்துள்ளது. ஆனால் அது இன்றும்கூட தன்னை ஒரு கலாச்சார அமைப்பாகக் கூறிக் கொள்கின்ற பொழுது நகைக்கவே தோன்றும்!

 எழுபதுகளின் போருக்குப் பிந்தைய புதிய காலனித்துவ ஒழுங்கின் ஒரு திருப்புமுனையாக முதல் பெரும் உலகளாவிய நெருக்கடியான தேக்கநிலை என்று அழைக்கப்பட்டது உருவாகியது. இதன் விளைவாக, இடதுசாரிகளின் கருத்தியல் - அரசியல் பின்னடைவைப் பயன்படுத்தி, ஏகாதிபத்தியம் அதன் சமூகநல முகமூடியைக் கைவிட்டு, புதிய தாராளமயம் என்று அழைக்கப்படும் மூலதனக் குவிப்பு செயல்முறைக்கு மாற்றியது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, 1970 களில் இந்தியாவை எதிர்கொண்ட அரசியல்-பொருளாதார நெருக்கடி 1975 - இல் இந்திரா ஆட்சியில் அவசரநிலை பிரகடனத்திற்கு வழிவகுத்தது. மேற்சொன்ன ஏகாதிபத்திய நெருக்கடியுடன் ஒருங்கிணைந்ததாக இது நெருக்கமாக இணைந்தது. 1977 - இல் எமர்ஜென்சி நீக்கப்பட்டாலும், எமர்ஜென்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்திய அரசு புதிய தாராளவாத கட்டளைகளுக்கு சரணடைந்தது. ஏகாதிபத்திய-கார்ப்பரேட் மூலதனத்தால் புதிய காலனித்துவ பெரும் கொள்ளையை தீவிரப்படுத்தியது.

 இந்தியாவின் இந்த மிக நெருக்கடியான காலகட்டத்தில், உலகளாவிய கார்ப்பரேட் மூலதனத்துடன் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக, நேருவின் தலைமையிலான அரசு 'வளர்ச்சி' மாதிரியைக் கைவிட்டு, புதிய தாராளவாதக் கொள்கைகளைத் தழுவியது. இதன் விளைவாக, ஆர்எஸ்எஸ் தன்னுடைய நன்கு சிந்திக்கப்பட்ட மூல தந்திரத்தை வடிவமைத்தது. இறுதியில் பிஜேபியை அதன் அரசியல் கட்சியாக முன்நிலைபடுத்தியதன் மூலம் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக, அதாவது இந்துத்துவ பாசிச அரசாக மாற்றுவதற்கான மூலதந்திரம் திட்டமிடப்பட்டது. மேலும், காங்கிரஸால் பின்பற்றப்படும் மென்மையான இந்துத்துவாவின் பங்களிப்பை திறம்படப் பயன்படுத்தி, பெரும் கார்ப்பரேட் முதலாளிய நிறுவனங்களின் ஆதரவுடன், ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் பாஜகவை இந்தியாவின் மிகப் பெரிய ஆளும் வர்க்கக் கட்சியாக மாற்றுவது பாசிச ஆர்எஸ்எஸ்ஸுக்கு எளிதானது. உலக அளவில் புதிய பாசிசத்தின் எழுச்சியின் பின்னணியில் வேர்க் கால்கள் மட்டங்களிலிருந்து ( மைக்ரோ)உயர்மட்ட பெரும் அளவு (மேக்ரோ) மட்டங்கள் வரை அதன் பல பரிமாண விளைவுகளைக் கொண்டு அரச அதிகாரத்தை பாசிசம் அபகரிப்பு செய்தது.

20 - ஆம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டில் ஆர்எஸ்எஸ் தனது பாசிச நச்சு கொடுக்குகளை முழு அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் துறைகளிலும் நிலைநிறுத்த வழிவகுத்த செயல்முறைகளின் முழுப் பாதையையும் இங்கு வரைய விரும்பவில்லை. 1920 - களின் அரசியல்-பொருளாதார நெருக்கடியிலிருந்து திடீரென எழுந்த முசோலினி-ஹிட்லர் பாசிசங்களைப் போன்று இல்லாமல், ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்திய பாசிசம் ஒரு திட்டமுறையிலான, நிலையான, நீண்டகால செயல்முறையில் வேரூன்றியதாகும். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரை ஆழமாக வேரூன்றி, பல பரிமாண ஊடுருவல்களுடன். இந்திய அரசின் ஒட்டுமொத்த சிவில், இராணுவ அமைப்பு எந்திரங்களில் - மற்ற ஏகாதிபத்திய சக்திகளுடன் கடுமையான முரண்பாடுகளைக் கொண்டிருந்த பாரம்பரிய (கிளாசிக்கல்) பாசிசத்தைப் போன்று இல்லாமல் - இந்துத்துவ பாசிஸ்டுகள் மிக ஆரம்பத்திலிருந்தே காலனித்துவ காலம், போருக்குப் பிந்தைய புதிய காலனித்துவ காலம் ஆகிய இரண்டிலுமே சர்வதேச நிதி மூலதனத்திற்கு அடிபணிந்தவர்கள். எவ்வாறாயினும், 1980 - களில் புதிய தாராளவாத காலத்தில் இருந்து ராம ஜென்மபூமி இயக்கத்துடன் இந்த செயல்முறையானது தொடங்குகிறது. 1992 - இல் பாபர் மசூதி இடிப்பு, தீவிர வலதுசாரி புதிய தாராளவாத கொள்கைகளை இந்தியா தழுவிய சூழலில், வாஜ்பாய் அரசாங்கத்தின் கீழ் 'உலகமயமாக்கலின் இரண்டாம் தலைமுறை', 1990 களின் பிற்பகுதி - 21 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதி, 2002 - இல் குஜராத் படுகொலை, 2014 - இல் மோடி அரசு கட்டிலில் ஏறுதல், 2019 - இல் மோடி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்தல் போன்ற நிகழ்வுகள் இந்த புதிய-பாசிச மாற்றத்திற்கான சில முக்கியமான மைல் கற்களாகும்.

வெளிப்படையாகத் தெரியும்படி, மோடி.2- இன் கீழ், பொருளாதாரம் அனைத்தும் தனியார் கார்ப்பரேட் பெருநிறுவனமயமாக்கல், குடிமைக் கட்டமைப்பு – அரசியலமைப்புச் சட்டம், நிர்வாக, நிறுவனத் துறைகள் உட்பட- இராணுவக் கட்டமைப்புகள் (ஆர்எஸ்எஸ் முயற்சியில் இராணுவப் பள்ளிகள் தொடங்குவதிலிருந்து அக்னிபாத் திட்டம் வரை) வரையில், ஆர்எஸ்எஸ் இப்போழுது இந்துராஷ்டிராவை நிறுவுவதற்கான அதன் இறுதி இலக்கை நோக்கி நகர்கிறது. இது ஒரு சகிப்புத்தன்மையற்ற தேவராஜ்ய (இறை அச்சம் கொண்டதான) அரசாகும். இது 1939 - இல் கோல்வால்கரால் 'நாம், நமது வரையறுக்கப்பட்ட தேசம்' என்பது மனுஸ்மிருதியின் கோட்பாடுகளுக்கு இணங்க வரையறுக்கப்பட்ட மாபெரும் மகத்தான பணியானகும். ‘முஸ்லீம் எதிர்ப்பு’ (உதாரணமாக, இன்று பூமியில் 'அதிக துன்புறுத்தப்படும்' சிறுபான்மையினராக ஐ.நா.வால் வகைப்படுத்தப்படும் ரோஹிங்கியாக்களை 'ஊடுருவுபவர்கள்' என்று சித்தரிப்பது போன்ற) இந்துத்துவாவின் அனைத்துத் தனித்தன்மைகளும், அகண்ட-இந்தியாவின் ஒரே மாதிரியான சீரழிவு சிதைவுக்குள் தள்ளுதல், ஒடுக்கப்பட்ட சாதி அமைப்புகளை கீழ்மைப்படுத்தி இந்துத்துவாவுடன் ஒருங்கிணைத்தல், நவீனத்துவத்தின் அனைத்து மதிப்பீடுகளையும் நிராகரித்தல், பகுத்தறிவு-அறிவியல் சிந்தனைகளை மறுத்து பாரம்பரியத்தை, மூடத்தனத்தை வழிபடுவதை வளர்ப்பது, கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகளை தேசத் துரோகமாகக் சித்தரித்தல், வீர புருஷர்களை வழிபடுதல், மேட்டிமைத்தனம், கம்யூனிச எதிர்ப்பு ஆகியவற்றை சமரசமற்ற கார்ப்பரேட் நிதி மூலதனத்துடன் ஒருங்கிணைப்பது என்பன ஆர்எஸ்எஸ் புதிய பாசிசத்தின் பண்பு வெளிப்பாடுகளாகும்.

தொடரும்....


தொடரும்....

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.