புனையப்படும் பொய் ‘வரலாறு’! பாகம் - 2

பேரா. ஆதித்ய முகர்ஜி

நன்றி மார்க்சிஸ்ட் ரீடர்

காலனிய ஆய்வாளர்களின் தவறான கூற்று

இந்திய வரலாறு குறித்த காலனிய / வகுப்புவாத விளக்கவுரை, இந்து-முஸ்லிம் மோதல் காரணமாக நேரிட்ட ‘மனவேதனைகள்‘ குறித்து மீண்டும் மீண்டும் உரையாடலை மேற்கொள்கிறது. பிரபல இந்து கருத்தியலாளரான கே.எம். முன்ஷி, 1951இல் சமர்ப்பித்த ஆய்வறிக்கையொன்றில், தற்போது ஆஃப்கானிஸ்தானத்தில் உள்ள கஜினி பகுதியின் சுல்தானாக விளங்கிய மன்னன் முகம்மது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1026இல் நடத்திய படையெடுப்பில் சோமநாதர் ஆலயம் தாக்குதலுக்குள்ளானது குறித்த தனது தரவுகளை வெளியிட்டுள்ளார். இந்தப் படையெடுப்பின்போது, சோமநாதர் கோயில் தாக்கப்பட்டது, “ஒரு தேசியப் பேரழிவாக, மறக்கவியலாத மாறாத வடுவாக, இந்துக்களின் மனதில் பதிந்துவிட்டது” என்று முன்ஷி குறிப்பிடுகிறார். இதன் மூலம் 19ஆம் நூற்றாண்டில் காலனியாட்சி உருவாக்கிய கருத்தாக்கத்தையே முன்ஷியும் எதிரொலிக்கிறார். ஆனால், 1026இல் இந்துக்களின் மனதிற்கு ஏற்பட்டுவிட்ட ‘காயங்களுக்குப்‘ பழி தீர்த்திடும் வகையில் எதிர்வினை ஆற்றிட வேண்டும் என்கிற பேச்சும் வாதமும், 800 வருடங்கள் கடந்து, 1843இல் தான் எழுப்பப்படுகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரால் இப்பிரச்னை எழுப்பப்படுகிறது. 

இவ்வாறாக, 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்படுகிற ‘காலனிய வரலாற்றாய்வு‘, இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே பல நூற்றாண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருவது போன்ற ஒரு சித்திரத்தைத் தீட்ட முனைந்துள்ளது. இதையொட்டியே, இந்து, முஸ்லிம் என இரு தேசக் கோட்பாட்டை உருவாக்கி, இருவரும் தனித்தனி தேசங்கள் என வரையறை செய்தது. ஆனால் புகழ்பெற்ற வரலாற்றியல் அறிஞர் ரொமிலா தாப்பர், காலனிய ஆய்வாளர்களின் மேற்சொன்ன அத்தனை கூற்றுகளையும் வன்மையாக மறுப்பதோடு, தகுந்த ஆதாரங்களுடன் தனது கருத்தாக்கங்களை முன்வைக்கிறார். பண்டைய நாட்களிலும், இடைப்பட்ட காலத்திலும் உலகெங்கிலும் படையெடுப்புகளின்போது, அதன் ஒரு பகுதியாக, மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதும், அவற்றிலிருந்து மதிப்பு வாய்ந்த, விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடிப்பதும், மத வேறுபாடுகள் கடந்து, எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் நடந்து வந்துள்ள நிகழ்வே என்பதை எடுத்துரைக்கும் பேராசிரியர் ரொமிலா தாப்பர், 1026ஆம் வருடத்திய தாக்குதலும் அவ்வாறான ஒன்றே என விளக்குகிறார். 150 வருடங்கள் கழித்து, ஒரு இந்து மன்னனால் சோமநாதபுரம் ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படுகிறது. இதையொட்டிக் கிடைத்துள்ள பதிவுகளில், கஜினி முகம்மதுவால் சோமநாதர் ஆலயம் தாக்கப்பட்டது பற்றிய எந்தவிதக் குறிப்பும் இல்லை. 250 வருடங்களுக்குப் பிறகு, சோமநாதர் கோயிலுக்குச் சொந்தமான ஒரு இடத்தில் இஸ்லாமிய வணிகர் ஒருவரால் மசூதி ஒன்று கட்டப்படுகிறது. அப்பகுதியை ஆளும் இந்து மன்னர், உள்ளுர் வணிகர்கள், ஆலயத்தில் பூசை செய்வோர் என அனைவரிடமும் முறையான அனுமதியைப் பெற்று, மசூதி எழுப்பப்பட்டது. இந்த இந்துக்களின் உள்ளங்களில் மேலே குறிப்பிட்ட வடுக்களும், வேதனைகளும் பதிந்து கிடந்ததாகச் செய்தி ஏதுமில்லை. அப்படி எதுவும் இந்துக்களின் நினைவுகளில் நிழலாடவில்லை. அத்தகைய ‘நினைவுகள்‘, காலனிய ஆட்சிக் காலத்தில்தான், மத/வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் உருவாக்கம் பெற்று பரவலாக எடுத்துச் செல்லப்பட்டன என்பதை ரொமிலா தாப்பர் அறுதியிட்டு விளக்குகிறார்.

சரியான முறையில் தொகுக்கப்பட்ட இந்திய வரலாறு

இந்திய தேசத்தின் விடுதலைக்குப் பிறகே, இந்தியாவின் வரலாற்றைச் சரியான முறையில் கொண்டு செல்வதற்கான களம் ஓரளவு கிட்டியது. காலனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றின் குறைபாடுகளையும், குளறுபடிகளையும் அகற்றி, இந்தியக் கண்ணோட்டத்தில் தேசத்தின் சரித்திரத்தைப் புரிந்து கொள்வதற்கும், பண்டைய நாட்களிலிருந்து தற்காலம் வரையிலுமான இந்திய சமூகக் கட்டமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அளவீடுகளை அறிந்து கொள்வதற்கும் உதவிடும் வகையில் தலைசிறந்த வரலாற்றியல் வல்லுநர்களை வைத்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வழிபிறந்தது. 1960-களிலும், 1970-களிலும் இந்தியாவின் பெருமைமிக்க பல்கலைக் கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இதற்கான பணிகள் முறைப்படி துவங்கின.

இந்திய வரலாற்றின் நுணுக்கங்களைச் சரியான கோணத்தில் இந்திய பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் 1960-களில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார்பில் சில முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தலைசிறந்த வரலாற்றியல் கல்வியாளர்களான ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஆர்.எஸ். சர்மா, சதீஷ் சந்திரா போன்றோர், தமது சமூகக் கடமையின் ஒரு பகுதியாக, தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தயார் செய்து கொடுத்தனர். எடுத்துக் காட்டாக, 6ஆம் வகுப்பில் பயிலும் 11 வயது சிறார்களுக்கான பாடப்புத்தகத்தை ரொமிலா தாப்பர் தயாரித்து வழங்கினார். நானறிந்த வரையில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு முக்கியத்துவத்துடன், இத்தனை பெரிய அளவில் கல்விசார்ந்த இத்தகைய பணி அரசின் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக மிக அருமையான பாடப் புத்தகத் திரட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு வசப்பட்டன. 50ஆண்டுகள் கடந்து இன்றும் அவை கல்வி வளாகங்களில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. 

ஆர்எஸ்எஸ் இன் மனப்போக்கு ஒரு பாசிச மனப்போக்கு

அறிவியல்பூர்வமான, மதச்சார்பற்ற கல்விக்கு, வகுப்புவாதக் கண்ணோட்டத்துடனான எதிர்ப்பும், தாக்குதலும் துவக்கத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்து கொண்டிருந்தது. ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் எனப்படுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பு, ஒரு தனியார் இராணுவம் போலச் செயல்படுவதையும், ஹிட்லர் காலத்திய ஜெர்மனியின் நாஜிக்கள் போன்று அவர்களது பயிற்சிகள் அமைந்திருப்பதையும் குறித்து ஜவஹர்லால் நேரு ஆரம்ப நாட்களிலேயே எச்சரிக்கை விடுத்தார். ‘ஆர்எஸ்எஸ்இன் மனப்போக்கு ஒரு பாசிச மனப்போக்கு‘ என்று தனது மதிப்பீட்டை நேரு வெளிப்படையாகவே தெரிவித்தார். 

மகாத்மா காந்தியின் படுகொலையையடுத்து, துணைப்பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலின் முழு சம்மதத்துடன், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டு, அதன் 25,000 செயல்பாட்டாளர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, அனைவரும் விடுதலையானதும், ஆர்எஸ்எஸ் அமைப்பு, கருத்தியல் ரீதியான தன்னுடைய தாக்குதலை தேசத்தின் மீது தொடுக்க ஆரம்பித்தது. இதன் பின்விளைவுகளை நன்கு உணர்ந்திருந்த நேரு, ஆர்எஸ்எஸ் இன் அபாயகரமான செயல்முறைகள் பற்றிய தனது ஆதங்கத்தையும், எச்சரிக்கையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதையொட்டி அனைத்து மாகாண முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில்தான் “ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் முழுமையான மனப்போக்கும், பாசிச மனப்போக்கே” என்றும், ‘அவர்களது நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் ‘ என்றும் நேரு குறிப்பிட்டார். இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற அறிஞர் மார்சியா கசோலரி தனது ஆழமான ஆய்வுகள் மற்றும் நேரடி கள விசாரணைகள் மூலம், “ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உள்ளிட்ட இந்து வகுப்புவாதச் சிந்தனையாளர்கள் அனைவரும் இத்தாலி மற்றும் ஜெர்மனியில்அரங்கேற்றப்பட்ட பாசிச மாடல் நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதைப் பாராட்டிக் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள்” என்றும், “இவர்களது முக்கியத் தலைவரான பி.எஸ். மூஞ்சே, இத்தாலிக்கு நேரடியாகவே வருகை புரிந்து, சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்து, அவரது அறிவுரையையும், ஆலோசனையையும் பெற்றவர்” என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மதவாத பாடத்திட்டம்

அரசியலில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம்’ என்று எழுத்துபூர்வமாக வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து தாங்கள் ஒரு ‘கலாச்சார அமைப்பு‘ தான் என்று ஆர்எஸ்எஸ் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கிறது. ஆனால் இன்னொருபுறம், பிரிவினையைத் தூண்டி வெறுப்பினை உமிழும் தனது மோசமான கருத்தியலைப் பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சிலே பரப்பி, பதியச் செய்திடும் நோக்கத்துடன் ‘சரஸ்வதி சிசு மந்திர்‘ என்கிற பெயரில் நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான கல்வி நிறுவனங்களைத் துவக்கி ஆர்எஸ்எஸ் நிர்வகித்து வருகிறது. இத்தகைய தன்மையில் முதலாவது பள்ளி 1952இல் ஆர்எஸ்எஸ்-ன் அன்றைய தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. (கோல்வால்கரின் விநோதமான வரலாற்று மற்றும் புவியியல் ஞானம், பல நேரங்களில் பரிகசிப்புக்கு ஆளானதுண்டு. “ஆரியர்கள் வட துருவத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று சொல்ப்படுகிறது. இருக்கக் கூடும். ஆனால் உண்மையில் வட துருவமானது அப்போது இந்தியாவில்தான் இருந்தது. இன்றைய பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் தான் வட துருவம் நிலை கொண்டிருந்தது. பின்னர் ஆரியர்கள் இங்கேயே தங்கிவிட, வட துருவம் மட்டும் இடம் பெயர்ந்து, இப்போதுள்ள இடத்திற்குச் சென்று விட்டது” என்பது கோல்வால்கரின் புகழ்பெற்ற வாதம்). 

ஆண்டுகள் செல்லச்செல்ல, ஆர்எஸ்எஸ்இன் வலைப்பின்னலும் அதிகரித்தே வந்துள்ளது. 1977இல் 500 என்றிருந்த ஆர்எஸ்எஸ் பள்ளிகளின் எண்ணிக்கை, 1993-94இல் 6,000 ஆகவும், 1999இல் 14,000 ஆகவும் உயர்ந்துவிட்டது. இந்தப் பள்ளிகளின் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாதக் கருத்தியல் இளம் மாணவச் செல்வங்களின் மூளைக்குள் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளையும் தாண்டி, உ.பி., குஜராத், ம.பி., கர்நாடகம் உள்ளிட்ட பிஜேபி ஆளும் பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் வாயிலாகவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் புகுத்தப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் பள்ளிகளில் 9 வயதும், 10 வயதும் உடைய நான்காம்/ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வரலாற்றுப் புத்தகத்தில், “இந்தியாவுக்குள் நுழைந்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள், ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் குரானும் கொண்டு வந்தார்கள்”, “நான்கு திசைகளிலும் படையெடுத்துச் சென்ற அவர்கள், எதிரில் வருகிற எல்லோரையும் கொல்வது, வழிபாட்டுத் தலங்களை இடிப்பது, பல்கலைக் கழகங்களைத் தகர்ப்பது, நூல் நிலையங்களைக் கொளுத்துவது, பிற மதங்களின் புனித நூல்களை எரிப்பது, தாய்மார்களையும், சகோதரிகளையும் மானபங்கப் படுத்துவது என அத்தனை கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டனர்“, “நீதி, நியாயம், கருணை போன்றவையெல்லாம் அவர்கள் அறியாதவை“ என்று இஸ்லாம் வளர்ச்சி குறித்த பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

(இந்து வகுப்புவாதக் கும்பலால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், புனே நகரில் பந்தார்கர் நூலகம் அடித்து நொறுக்கப்பட்டதையும், 2002இல் குஜராத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதையும் நாம் மறந்துவிட வேண்டும்).

ஆர்எஸ்எஸ்இன் இன்னொரு வெளியீடு, கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பவர்களாகவும் சித்தரிக்கிறது. “கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் செய்த சதித் திட்டத்தின் காரணமாகவே இந்திய நாடு துண்டாடப்பட்டது“, “கிறிஸ்தவ மிஷினரிகள் நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப் பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசவிரோதக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இவர்களால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அபாயம் நேரிட்டுள்ளது“ என்று மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

குஜராத்தின் பள்ளிப் பாடப் புத்தகத்தில் ஹிட்லருக்குப் புகழ்மாலை சூட்டப்படுகிறது. இன்னொரு நூலில், மெக்கா மசூதியின் மையப்பகுதியில் உள்ள காபா கட்டிடம், சிவலிங்கமாகச் சித்தரிக்கப்படுகிறது. டில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளரான குத்புதீனால் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது குதுப்மினார். ஆனால் இது 4ஆம் நூற்றாண்டில், சமுத்திரகுப்தரால் எழுப்பப்பட்ட ‘விஷ்ணு ஸ்தம்பம்’ என்று கற்பிக்கப் படுகிறது. வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன், முற்றிலும் உண்மைக்கு மாறான செய்திகள் ஆர்எஸ்எஸ் பள்ளிகளுக்கும் அப்பால் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றன.  

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ அகராதியின்படி, இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ‘வெளியாட்கள்‘ ஆவர். இந்திய நாட்டின் மீதான அவர்களுடைய பற்றும், விசுவாசமும் கேள்விக்குரியது. இந்துக்களின் ‘புண்ணிய பூமி‘ இந்தியாவிலேயே உள்ளது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு அரேபியாவின் மெக்காவிலும், கிறிஸ்தவர்களுக்கு பாலஸ்தீனத்தின் ஜெருசலேமிலும் இருக்கிறது. ஆக, இந்துக்கள் மட்டுமே ‘இந்திய தேசம்‘ என்கிற அடையாளத்துக்குச் சொந்தம் கொண்டவர்கள் என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நிலைபாடு. 

பார்த்த மாத்திரத்திலேயே பரிகாசத்துக்குரிய இத்தகைய விளக்கவுரையின் மூலமாகத்தான், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் அந்நியப்படுத்தி, அவர்களை ‘வேறானவர்கள் (Others)‘ என்று வகைப்படுத்துகிறது ஆர்எஸ்எஸ். இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்தியாவின் குடியுரிமை மறுக்கப்பட வேண்டும் என்பதே இதன் உள்ளடக்கம். 

ஒரு வாதத்திற்கு ஆர்எஸ்எஸ்-இன் மேற்கூறிய ‘விளக்கம்‘ ஏற்றுக் கொள்ளப்படுமானால், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏன் ஆசியாவிலேயே தென் கொரியாவிலும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ சமூகத்தினர், தத்தம் நாடுகளில் குடியுரிமை கோர முடியாது – காரணம் அவர்களது புண்ணிய பூமி பாலஸ்தீனத்தில் இருக்கிறது.

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், கல்வி நிலையங்களைக் காவிமயப் படுத்தும் ஆர்எஸ்எஸ்-இன் முயற்சிக்குப் புதிய வலு கிட்ட ஆரம்பித்தது. 2019-இல் பிஜேபி கட்சி நாடாளுமன்றத்தில் தானே அறுதிப் பெரும்பான்மையை அடைந்துவிட்டதால், கூட்டணிக் கட்சிகளுடனான கலந்தாலோசனை போன்ற எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி, ஆட்சியதிகாரத்தைத் தனது விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் வந்து சேர்ந்தது.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.