புனையப்படும் பொய் ‘வரலாறு’! பாகம் - 3

 பேரா. ஆதித்ய முகர்ஜி

நன்றி - மார்க்சிஸ்ட் ரீடர்

கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள்

மாணவர்களுக்குப் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பாடத் திட்டம், தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்ட உண்மை நிகழ்வை உரைக்க மறுக்கிறது.  இந்திய தேசிய இயக்கத்தில் முன்னணிப் பங்கு வகித்த மாபெரும் தலைவர்கள் பற்றிய பாடத்தில், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாருடன் 30 வருடங்களுக்கு மேலாக வீரச் சமர் புரிந்து, அதில் முழுவதுமாக 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, அரும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு கூட  இடம் பெறவில்லை.

ஆனால் நேருவைப் பற்றிய எதிர்மறையான குறிப்பு மட்டும் பாடத் திட்டம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.  இந்திய தேசம் சந்தித்த அத்தனை பிரச்னைகளுக்கும் முழுமுதற் காரணம் நேருவும், அவர் பின்பற்றிய கொள்கைகளும்தான் என்று வன்மையாகச் சாடும் இந்த வரலாற்றுப் பாடத் திட்டம், போகிற போக்கில், முழுவதும் கற்பனையான கற்பிதமாகக் கூறப்படுகிற, நேருவின் மூதாதையர்களின் முஸ்லிம் (!) மதச் சார்பு பற்றியும் பேசுகிறது.  (பிஜேபி-யின் தலைவர் ஒருவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழில், ‘காந்தியைக் கொன்ற கோட்சே, நேருவையும் சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும்‘ என்று வெளிப்படையாக எழுதியிருந்ததை இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது). 

கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள் ஆக்ரோஷமாக நடத்துகிற கருத்தியல் ரீதியான தாக்குதலானது, தேசத்தின் வரலாற்றைத் தங்கள் விருப்பம் போல திரித்துக் கூறுவது என்பதையும் கடந்து, பொது வெளியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  அது, இடைவிடாத தொடர் பிரசாரங்கள் மூலம், பழங்கால புராணக் கதைகள் குறித்த மாயத் தோற்றத்தையும், போலி பெருமித உணர்வையும் பெரும்பான்மை சமூக மக்களின் மனதில் பதியவிடுகிறது.  பின்னர் அதே பெரும்பான்மையினருக்கு, சிறுபான்மை மக்களிடமிருந்து அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்படப் போவதாக ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க எத்தனிக்கிறது.  இதன் மூலம் பெரும்பான்மை மக்களின் மனதில் அச்சவுணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் நிரந்தரமாக அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது.  உலகின் பல பகுதிகளிலும், தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முற்படும் பாசிச சக்திகள், இது போன்ற அணுகுமுறையையே பின்பற்றுகின்றன என யேல் பல்கலைக் கழகத்தின் தத்துவவியல் பேராசிரியர் ஜாசன் ஸ்டான்லி எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்தல்

ஒருசில உதாரணங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.  இன்றைய பிரதமர், 2014ஆம் ஆண்டு தான் பதவியேற்ற சில மாதங்களில் மும்பையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், புராணக் கதைகளில் கூறப்படும் புனைவுகளை வரலாற்றுடன் அப்பட்டமாக இணைத்து, உரை நிகழ்த்தினார்.  விநாயகப் பெருமானின் கதையானது, ‘இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி நடத்தப்பட்டதற்கான‘ சான்று என பிரதமர்  முழங்கினார்.  இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான மருத்துவர்களும், திரை நட்சத்திரங்களும், வர்த்தகத்தில் சாதனை படைத்து வரும் பெரிய வணிகர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.  இது போன்றே, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர், 2020 ஜனவரியில் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல், பொறியியல் கண்காட்சியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையில், ‘மகாபாரதத்தின் முக்கிய வீரனான அர்ஜுனன், நியூக்ளியர் சக்தி படைத்த அம்புகளைக் கொண்டே போரில் எதிரிகளை வீழ்த்தினான்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அன்றைய தலைவரான  சர்சங்சலாக் கே.எஸ்.சுதர்சன்,‘பரத்வாஜ முனிவரும், போஜ ராஜனும், புதிய விமானங்கள் வடிவமைப்பது பற்றி மட்டுமல்ல; அவற்றில் ஒவ்வொரு விமானத்தையும் எவ்வளவு உயரத்தில் பறக்கவிடுவது என்பது பற்றியும், அதில் எழும் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றியும் கூட விரிவான உரையாடல் நடத்தியதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு ‘இந்துக்கள்‘ கடந்த காலங்களில் ‘அளப்பரிய சாதனைகளைப்‘ படைத்திருந்தாலும், இன்று அவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்தித்து வருகிறார்கள் என்கிற கற்பிதம் வகுப்புவாத சக்திகளால் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.  கடந்த நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் இந்துக்கள் என்னென்ன ‘சித்திரவதைகளை‘ அனுபவித்தார்கள் என்று மீண்டும் மீண்டும் மக்களுக்கு ‘நினைவூட்டப்‘ படுகிறது.  தேசத்தின் தலைநகர் புது டில்லியிலிருந்து மிக அருகாமையில் இருக்கும் ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறங்களில் ஒரு கதை சொல்லப்படுவதை நானே பலமுறை கேட்டுள்ளேன்.  முகலாய மன்னன் அவுரங்கசீப்பிடம் தினந்தோறும் இரவில் கணிசமான எண்ணிக்கையில், உயர்சாதியினர் அணிந்து கொள்ளும் பூணூல் சரடுகளைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான் உறங்கச் செல்வானாம்.  நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது மதம் மாற்றப்பட்டனர் என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான் அவனுக்குத் தூக்கம் வருமாம்.  நான் வரலாற்றுப் பாடம் கற்பிக்கும் பணியில் உள்ளவன் என்பதைத் தெரிவித்தவுடன், என்னிடம் இந்த ‘வரலாறு’ உடனடியாகச் சொல்லப்படுகிறது.

பிஜேபி அரசு புது டில்லியின் ஒரு சாலைக்கு இடப்பட்டிருந்த அவுரங்கசீப்பின் பெயரை அகற்றியதை, தனது வீரச் செயலாகப் பெரிதும் விளம்பரப்படுத்திக் கொண்டது.  வலிமைமிக்க உள்துறை அமைச்சர் பதவியைத் தன் வசம் வைத்திருக்கும் திருவாளர் அமித் ஷா, இந்தியாவுக்குள் வங்கதேச முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் தினந்தோறும் ‘ஊடுருவிக் கொண்டிருப்பதாகவும்‘, நாட்டின் பல பகுதிகளிலும் ‘கறையான்கள் போலப் பரவி‘, அவர்கள் நடமாடிக் கொண்டிருப்பதாகவும், அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் அடிக்கடி ‘எச்சரிக்கை‘ விடுத்து வருகிறார். முஸ்லிம்களால் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் ஆபத்து காத்திருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம், நாடு முழுவதும் நெருப்பாகப் பற்றிப் பரவச் செய்யப்படுகிறது. இந்துக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்து வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என பல முனைகளிலிருந்தும் பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது.  இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முஸ்லிம்கள் தங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள ‘பலதார மண முறை‘யைப் பயன்படுத்திக் கொண்டு, மிகவும் அதிகமான எண்ணிக்கையில் பெருகி வருவதாகவும், வெகு விரைவில் நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்களைப் பின்னுக்குத் தள்ளி முஸ்லிம்கள் முந்திச் சென்று, பெரும்பான்மையை எட்டி விடுவார்கள் என்றும் ஒரு கருத்து உரத்த குரலில் முன்வைக்கப்படுகிறது.  தேசத்தின் அத்தனை தரவுகளையும், பல்வேறு புள்ளி விவரங்களையும், மக்கள் தொகை கணக்கீடுகளையும் மூடி மறைத்து, முழுவதும் பொய்யான ஒரு வாதம், மிகவும் திட்டமிட்டு உலவ விடப்படுகிறது. இத்தகைய ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு, உத்தரப்பிரதேசத்தில் ‘மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதா‘ ஒன்று நிறைவேற்றப்பட்டு, அதிக குழந்தைகள் உள்ள ஏழை இஸ்லாமியர் குடும்பங்கள் தண்டனைக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. 


பாசிசச் சிந்தனையாளர்கள் பின்பற்றும் இன்னொரு பொதுவான வழிமுறை, பெரும்பான்மை சமூகத்தவரிடம், பாலியல்  ரீதியாக அவர்களுக்குப் பெரும் இடர்ப்பாடுகள் இருப்பதாக அச்சமூட்டுவது.  இதன் ஒரு வடிவமாகவே, அப்பாவி இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதல் என்ற பெயரில் குறி வைப்பதாகவும், அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாகவும் ஓயாத பிரசாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.  ‘லவ் ஜிகாத்‘ என்று வர்ணிக்கப்படுகிற இந்தக் ‘குற்றத்தை‘ தடுத்து நிறுத்துவதற்கென்று, பிஜேபி ஆளும் மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  இது மட்டுமன்றி, காலனிய ஆட்சிக் காலத்திய தேசத் துரோகச் சட்டம், சமீப ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ‘உபா‘ சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கயவர்களாகவும், கிரிமினல் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கும் கவலைக்குரிய போக்கு அதிகரித்துள்ளது. 

சிறுபான்மை சமூகத்தினர் மீதான பொதுவெளி தாக்குதல்களும், ஏன் கும்பல் படுகொலைகளும் சமீப ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளன.  அரசு நிர்வாகம் இத்தகைய கொடூர நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது.  அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2021-ஆம் வருடத்திற்கான தனது ஆண்டறிக்கையில், சர்வதேச அளவிலான மத சுதந்திரம் பற்றிய குறிப்பில், ‘இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் தாக்குதலுக்குள்ளாவது, படுகொலை செய்யப்படுவது,  அச்சுறுத்தல்களுக்கு ஆளாவது போன்ற கொடுமைகள் ஆண்டு முழுவதும் அரங்கேறி வந்துள்ளன‘ என்று தெரிவித்துள்ளது.

அயோத்தியில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, அது தான் இந்து கடவுள் இராமர் பிறந்த இடம் என்று வலதுசாரி வகுப்புவாத சக்திகள் நடத்திய பிரசாரத்தின் பின்னணியில் 1992-இல் இடித்துத் தள்ளப்பட்டது. தற்போது அங்கே கட்டப்பட்டு வரும் மிகப் பெரிய இராமர் கோயிலுக்கு 2021-இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  இதே போன்ற பிரச்னைகள் வேறு இடங்களை மையமாக வைத்து தற்போது மீண்டும்  எழுப்பப்படுகிறது.  1991-ஆம் வருடம் இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய வழிபாட்டுத் தலங்கள் சட்டம், அனைத்து இறை வழிபாட்டு இடங்களும் நாடு விடுதலையடைந்த 1947 ஆகஸ்ட் 15 தேதியில் இருந்த நிலையில் அவ்வாறே பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது.  ஆனால் அந்தச் சட்டத்தை முழுவதுமாக அவமதிக்கும் வகையில், மதுராவில் ஷாகி இத்கா மசூதியைக் குறிவைத்து, கிருஷ்ண ஜன்மஸ்தான் பிரச்னை எழுப்பப் படுகிறது.  அதே போல, வாரணாசியின் ஞானவாபி மசூதியின் நீரூற்றுப் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கு வழிபாடு நடத்த அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. 

உண்மைகளை மறைத்தல்

மேற்கூறிய மூன்று இடங்களிலும் இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு அவற்றின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டதாகவும், இதுபோல் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மசூதிகள் கட்டப்பட்டதாகவும், வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும், இந்து மதத்தின் பெருமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், அதுவே இந்துக்களின் மனதில் உள்ள காயங்களுக்கு மருந்தாக அமைந்திடும் என்றும், ஆர்எஸ்எஸ்-இன் தீய பிரசாரம் உரத்த குரலில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றின் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.  அயோத்தி, மதுரா, காசி ஆகிய மூன்று நகர்களிலுமே, பல நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் அமைதியாகவும், இணக்கமாகவும், பரஸ்பர புரிதலுடன் தோளோடு தோள் நின்று வாழ்ந்து வந்துள்ளனர்.  அவரவர் கடவுளுக்குப் படைக்கப்படும் பிரசாத காணிக்கைகளைப் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளும் தன்மையில் மக்களிடையே நல்லெண்ணமும், ஒன்றுபட்ட உணர்வும் பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.

இந்த ஒற்றுமைச் சூழலை உடைத்திடும் விதமாகவே, இந்துக்களுக்கு வலி, வேதனை, மாறாத வடு, மனதில் காயம், துயர நினைவுகள் என்று பல கற்பனைகள் உள்நோக்கத்துடன் உருவகம் பெற்றுள்ளன.  காலனிய ஆட்சியில் இந்திய சமூகத்தை இரு கூறாக்கி எதிரெதிர் திசையில் நிறுத்துவதற்கு சோமநாதர் ஆலயம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம்.  இத்தகைய முயற்சிகளின் ஊடாகவே அரசியல் களத்தில் ‘பெரும்பான்மை‘ வாதம் முன்னிறுத்தப்படுகிறது. உ.பி. முதல்வர் உள்பட பிஜேபி-யின் முன்னணித் தலைவர்கள், ‘80 : 20‘ என்று பேசி, இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க யத்தனிப்பதும் கவனிக்கத் தக்கது.

இந்திய பண்பாட்டின் அடிப்படையான பொது பாரம்பரியக் கூறுகளை மறுதலித்து, இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வலியப் புகுத்திடும் தன்மையில் தேசத்தின் வரலாற்றைத் திரித்துக் கூறுவதும், கடைந்தெடுத்த பொய்களுக்கு மெய்யான தோற்றம் தருவதும் வகுப்புவாத சக்திகளின் இன்றைய நடைமுறையாய் மாறியுள்ளது.  முகலாயர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளும், சாதனைகளும் கூட சர்ச்சையாக்கப்படுகின்றன. மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பெற்ற, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகால், அதன் எழில்மிகு கட்டிடக் கலைக்கும், நிபுணத்துவம் நிறைந்த வடிவமைப்பிற்கும் பெயர் பெற்றது.  ஆனால் தாஜ் மகால் ஒரு இந்து மன்னரால் கட்டப்பட்ட  இந்து கோயில் என்றும், அதன் பெயர் ‘தேஜோ மகால்‘ என்றும் ஒரு புதிய விவாதம் கிளப்பி விடப்படுகிறது. இத்தகைய சர்ச்சைக்குரல் அறுபதாண்டுகளுக்கு முன்பே, 1960-களில் ‘விநோதமாகச் சிந்திக்கும் விந்தை மனிதர்‘ புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்பவரிடமிருந்து எழுந்தது.  அபத்தமாகக் கருதப்படும் இவரது விவாதம் இதோடு முடியவில்லை.  பகவான் கிருஷ்ணரின் போதனைகளை உரைக்கும் ‘கிருஷ்ண நீதி‘ என்பதிலிருந்து தான் ‘கிறிஸ்தவ மதம்‘ உதித்தது என்றும், இந்து மதத்தில் துறவிகளின் வாழ்விடமாக சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் ‘வாதிகா‘ என்ற வார்த்தையிலிருந்துதான் ‘வாடிகன்‘ நகருக்குப் பெயரிடப்பட்டது என்றும், மெக்காவின் ‘காபா‘ சிவலிங்கத்தின் வடிவம் என்றும் அவர் அடுக்கிக் கொண்டே போகிறார்.  பல பத்தாண்டுகளாக இவரது மேற்கூறிய சர்ச்சைக் கருத்துக்கள், மனப்பிறழ்வு கொண்ட ஒருவரிடமிருந்து வெளிப்படுகிற, ஓரங்கட்டப்பட வேண்டிய உளறல்கள் என்றே எள்ளி நகையாடப்பட்டன.  ஆனால் இன்று, ‘ஓரங்கட்டப்பட்ட‘ இந்தக் கருத்துக்களுக்கு உயரிய இடம் வழங்கப்பட்டு, அதை விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகளாகவும், இடதுசாரி-மதச்சார்பற்ற சிந்தனையை முன்னிறுத்தி, இந்து உணர்வுகளை உதாசீனம் செய்பவர்களாகவும், முஸ்லிம்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் தாஜா செய்து திருப்திப்படுத்துவதற்காக, இந்துக்களை அவமதிப்பவர்களாகவும் முத்திரையிடப்படுகின்றனர்.

“அண்மைக் காலங்களில் இந்து வகுப்புவாதப் பேச்சாளர்கள், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வெறுப்பூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்” என்று தி எகானமிஸ்ட் ஏடு அக்கறையுடன் அம்பலப்படுத்துகிறது.  ‘முஸ்லிம்களைக் கூண்டோடு நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்‘, ‘முஸ்லிம் பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவோம்‘ என்றெல்லாம் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இவர்கள் கொக்கரிப்பது வாடிக்கையாகி வருகிறது. பீகார் மாநில பிஜேபி தலைவர்களுள் ஒருவரான ஹரிபூஷன் தாகுர் பச்சல், கடந்த மே 7 அன்று ஒரு பேரணியில், ‘இந்து பண்டிகைகளில் இராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுவதைப் போல, இஸ்லாமியர்கள் அனைவரும் உயிரோடு கொழுத்தப்பட வேண்டும்‘ என்று பேசினார்.  வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டும் தங்களுடைய வார்த்தை விளையாட்டுகள் மீது ஆளும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதை நன்கு அறிந்த இந்த இந்துத்துவ வெறியர்கள், ‘இந்துக்கள் அனைவருக்கும் ஆயுதங்கள்  அளிக்கப்பட வேண்டும்‘ என்றும், ‘இந்தியாவின் நன்மைக்காக, இஸ்லாமியர்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டும்‘ என்றும் பகிரங்கமாக அறைகூவல் விடுத்து, பொது வெளியில் முழங்கி வருகிறார்கள். 

தொடரும்.....

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.