கார்ப்பரேட் எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவையும், பாஜகவையும் சமமாக பார்க்கின்ற தற்குறி அரசியல்.

இன்று திமுகவையும் அதன் திட்டங்களையும் வசைபாடுகின்ற மக்கள் அதிகாரம் எனப் பெயரை வைத்துக் கொண்டு செயல்படும் திருவாளர்கள் வெற்றிவேல், மருது உள்ளிட்ட சிலர் 2018 ஆம் ஆண்டு திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

ஏன் ஒரு ஆளும் வர்க்க கட்சியைச் சார்ந்த தலைவர் மரணம் அடைந்ததற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்கான கேள்வி எதையும் அவர்கள் அப்போது எழுப்பவில்லை. அவர்கள் எழுப்பினாலும் எழுப்பா விட்டாலும் அதற்கான விடை சீனாவில் முதலாளித்துவ ஜனநாயகத்திற்காகப் போராடிய டாக்டர் சன்னியாட்சன் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாடுகளை புரிந்து கொண்ட எவருக்கும் இரண்டு வேறு குழப்பமான நிலை இருக்க முடியாது.

திமுகவின் கார்ப்பரேட் கொள்கைகளை விமர்சிப்பது வேறு! அதே சமயத்தில் பாஜகவையும், திமுகவையும் ஒரே தட்டில் வைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளை திசை திருப்புவதும், பலவீனப்படுத்துவதும் அரசியல் ரீதியிலான புரிதல் இன்றி தான்தோன்றி தனத்திலிருந்தும் அகநிலை விருப்பங்களில் இருந்தும் முன்வைக்கின்ற கருத்துக்களாகும்.

இதனால்தான் சொல்கிறோம் திமுகவை அதாவது திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை மக்கள் அதிகாரம் தனது கொள்கை அறிக்கையில் விமர்சித்து எழுதியிருந்தாலும் குறிப்பிட்ட தருணத்தில் அந்த கட்சியை எப்படி பார்ப்பது என்ற மார்க்சிய- லெனினிய பார்வை கொண்டு எமது அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

திமுக எதிர்ப்பு என்ற பெயரில் பாஜகவிற்கு சேவை செய்கின்ற சீமான்களும், சவுக்கு சங்கர்களும் கொள்கை விழுமியங்கள், மக்கள் நலன் போன்ற எதுவும் இல்லாமல் ரெட்டை நிலைப்பாடு எடுக்கலாம். ஆனால் 2020க்கு முன்பு பல்வேறு போராட்டங்களில் எங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்ட தோழர்களை தவறாக வழிநடத்துகின்ற சிலர் திமுக எதிர்ப்பு என்ற பெயரில் தொடர்ச்சியாக செயல்படுவது பாஜகவின் அடக்குமுறைகளுக்கு சாதகமாகவே அமையும் என்பதே நிதர்சனமாகும்.

ஒடுக்கப்பட்ட  சமூகத்தில் பிறந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அவமானங்களையும், இழிவுகளையும், சுமந்து திராவிட இயக்கத்தை பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாட்டில் நிறுத்திய கலைஞர் மு.கருணாநிதி பயன்படுத்திய பேனாவை கடற்கரையில் சின்னமாக எழுப்புவதற்கு பல்வேறு வகைகளில், பல்வேறு கோணங்களில் எதிர்ப்பை தெரிவிக்கிறது பார்ப்பன, மேல் சாதி கும்பல்.

இதற்கு சற்றும் குறைவில்லாமல் கடற்கரையில் பேனா வைப்பதை விமர்சிக்கின்றது வெற்றி, மருது குழு.

அவர்களுக்குப் பின்னால் செயல்படும் சிலர் பழைய வரலாறு எதையும் அறியாமல் தான்தோன்றித்தனமாக பேசி வருவதை அவர்களது அறியாமையில் வெளிப்படும் தவறுகளாகவே கருதுகிறோம். எனவே  அவர்கள் புரிந்து கொள்வதற்கு இந்த மீள் பதிவு பயன்படும் என்று கருதுகிறோம்.


தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி.



"மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்" கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார். "இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்" கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.

கலைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.

காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ‌, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.


தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.


“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.

“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.

அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.

கருணாநிதி மரணம்தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.

அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.

பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.

நினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.

இந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.

அவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.

அன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.

இவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.

ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.

எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.

டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.

1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.

எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.

ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.

கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.

கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.

“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.

“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.

இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.

காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.

கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.

கலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

மக்கள் அதிகாரம்,

தமிழ்நாடு.

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.