உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு; பாகம்_4

மே தின வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகள்



1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது.


 தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர். இப்போராட்டம் தொழிலாளர் இயக்கம் முழுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் முதல் மாபெரும் தேசிய அளவிலான வெகுஜன இயக்கமாக விளங்கியது. அரசு மற்றும் முதலாளிகளின் கூட்டுச் சதி காரணமாக இவ்வியக்கம் தோற்கடிக்கப்பட்டது.


இப்போராட்டங்களின் விளைவாக அமெரிக்க தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நிலைப்பாடு குறித்து மேலும் தெளிவை அடைந்தது. அதன் போர்குணமும் ஒழுக்கநெறியும் மேலும் செழுமையடைந்தன. இப்போராட்டங்கள் பென்சில்வேனியா சுரங்க அதிபர்களுக்கு ஒரு வகையான பதிலடியாக அமைந்தன.

ஏனெனில் இரண்டாண்டுகளுக்கு முன்புதான் 1875-ம் ஆண்டு சுரங்க தொழிலாளர் சங்கங்களை அழிக்கும் பொருட்டு தீவிர போர்க்குணமுள்ள பத்து தொழிலாளர்களை சுரங்க அதிபர்கள் தூக்குமரத்திலேற்றினார்கள்.


அமெரிக்க தொழிற்துறை மற்றும் உள்நாட்டு சந்தை 1880-90-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் தீவிர வளர்ச்சியடைந்தது. ஆனபோதிலும் 1884-85-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்த நிலை நிலவியது. இந்நிலை 1873-ல் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாகும். அப்போது வேலையில்லா திண்டாட்டமும் மக்கள் துன்பமும் பெருகியது. இது குறைவான வேலை நாளுக்கான இயக்கத்திற்கு உந்துதல் சக்தியை தந்தது.

கூட்டமைப்பு அப்போதுதான் உருவானது. நைட்ஸ் ஆப் லேபர் என்ற தொழிலாளர் ஸ்தாபனம் அதற்கு முன்பே இருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து வந்தது. எட்டு மணி நேர வேலை என்ற கோஷத்தின் கீழ் இவ்விரு அமைப்புகளுக்கும் வெளியே உள்ள தொழிலாளர்களை திரட்ட முடியும் என்று கூட்டமைப்பு உணர்ந்தது. 8 மணி நேர வேலை நாள் இயக்கத்துக்கு ஆதரவு தருமாறு ‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தை கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. அனைத்து தொழிலாளர்களும் பொதுவாக ஒரு நடவடிக்கையில் இறங்கினால்தான் தனக்கு சார்பான பலனை பெற முடியும் என்று கூட்டமைப்பு.


1885-ல் கூட்டமைப்பு மாநாடு அடுத்த ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் செய்வது பற்றி மீண்டும் எடுத்துரைத்தது. பல தேசிய சங்கங்கள் போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இறங்கின. குறிப்பாக மரவேலை மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் தயாரிப்புகளில் இறங்கினார். இந்த போராட்டத்தின் காரணமாக அப்போதிருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது. கூட்டமைப்பைக் காட்டிலும் பிரபலமாக விளங்கிய ‘நைட்ஸ் ஆப் லேபரி’ன் உறுப்பினர் எண்ணிக்கை 20 லட்சத்திலிருந்து 70 லட்சத்திற்கு உயர்ந்தது. அதே நேரத்தில் 8 மணி நேர இயக்கத்தையும் அதற்கான நாளையும் நிர்ணயித்த கூட்டமைப்பின் மதிப்பும் உயர்ந்தது.

அதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தது. வேலை நிறுத்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க ‘நைட்ஸ் ஆப் லேபர்’ அமைப்பின் தலைமை, குறிப்பாக, டெரன்ஸ் பெளடர்லி என்பவன் நாச வேலைகளில் இறங்கினான். தன்னுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென ரகசியமாக அறிவுறுத்தினான். இந்த விஷயம் வெளியானதும் கூட்டமைப்பின் புகழ் மேலும் உயர்ந்தது. இரு ஸ்தாபன ஊழியர்களும் போராட்டத் தயாரிப்புகளில் உற்சாகத்தோடு இறங்கினர். எட்டு மணி நேர வேலை நாள் குழுக்களும் சங்கங்களும் பல நகரங்களில் எழுந்தன. தொழிலாளர் இயக்கம் முழுவதும் போர்க்குணத்தின் தன்மை மேலிட்டது. திரட்டப்படாத தொழிலாளர்களையும் இது பற்றிக் கொண்டது. அமெரிக்க தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய நாள் அப்போது விடிந்து கொண்டிருந்தது.


தொழிலாளர்களின் அப்போதைய மனநிலையை அறிய சிறந்த வழி அவர்களின் போராட்ட அளவையும், ஆழத்தையும் ஆராய்வதே ஆகும். அப்போது நிகழ்ந்த பல வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களின் போராட்ட குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கின. 


முந்திய ஆண்டைக் காட்டிலும் 1886 மே முதல் நாளுக்கான வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கையும் ஏற்கனவே பெருகியது. 1881-84-ல் நிகழ்ந்த வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 500. வேலை நிறுத்ததில் பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,50,000. ஆனால் 1885-ல் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பின் எண்ணிக்கை 700 ஆகவும், பங்கு கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆகவும் உயர்ந்தது. 1886-ல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 1,572 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். 1885-ல் 2,467-ஆக இருந்த பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1886-ல் 11,562-ஆக உயர்ந்ததிலிருந்து வேலை நிறுத்தங்கள் பரவிய வேகத்தை தெரிந்து கொள்ளலாம். 

‘நைட்ஸ் ஆப் லேபர்’ ஸ்தாபனத்தின் நாசவேலை இருந்த போதிலும் 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள் என கணக்கிடப்படுகிறது.

இவ்வேலை நிறுத்தத்தின் மையமாக விளங்கியது சிக்காகோ நகரமாகும். இங்கு தான் வேலை நிறுத்த இயக்கம் மிகப் பரவலாக பரவி இருந்தது. மேலும் பல நகரங்களில் மே முதல் நாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயின்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டிட்ராய்ட் ஆகிய நகரங்களில் வேலை நிறுத்தங்கள் சிறப்பாக நடைபெற்றன. உதிரி மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் எண்ணிக்கை அப்போது அதிக அளவிலிருந்தது. 

இவர்களும் இப்போராட்டத்தால் கவரப்பட்டது இவ்வியக்கத்தின் சிறப்பம்சமாகும். ஒரு புரட்சிகரமான உணர்வு நாடு முழுவதும் நிலவியிருந்தது. முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் இதை சமூகப் போர் என்றார்கள்.

மூலதனத்தின் மீதான வெறுப்பு என்றார்கள். அப்போது கீழ்மட்ட ஊழியர்களிடையே நிலவியிருந்த அற்புதமான உற்சாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மே முதல் தின வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட தொழிலாளர்களில் பாதிப்பேர் வெற்றிகண்டதாக சொல்லப்படுகிறது. மற்ற இடங்களிலும் 8 மணி நேர வேலை நாளை அடைய முடியாவிட்டாலும் ஏற்கனவே இருந்த வேலை நேரத்தில் கணிசமான அளவு குறைக்கப்பட்டது.

தொடரும்...

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.