பரமார்த்த குருவும் சீடர்களும்!
பரமார்த்த குரு பண்டைய ஆடைகளை கலைந்து நவீன பாணியில் டக்கராக ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் சகிதம் நிஷ்டையில் அமர்ந்திருந்தார்.
குருவே இருப்புக்கு ஆபத்து! இருப்பிடத்துக்கும் ஆபத்து! ஆசிரமத்தை தூக்க வந்து கொண்டிருக்கிறது அரசு படை! இதற்குப் பெயர் ஏதோ பாசிசமாம், என்று பகர்ந்தனன் மட்டி.
பாசிசத்தை விரட்ட வழி ஏதும் உண்டா? குருவே பகர்வீர்!
பாசிசத்தை பற்றி சரியாக புரிந்து கொள்ளாத இடது, வலது கம்யூனிஸ்டுகளுடன் அணி சேர்ந்து விரட்ட முடியாது! ஏனென்றால் அவர்கள் போலிகள் என்று தாடியை தடவினார் பரமார்த்தார்! முன்னொரு காலத்தில் கேப்டனுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்தனர் அரசியல் கோழைகள் என்றும் எரிச்சல் அடைந்தார் குரு.
மண்ணின் மைந்தன் ஆனாலும் பழங்குடியானாலும், கல்லையும், மண்ணையும், கனிம வளங்களையும் சுரண்டி கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் கனவான்களை தட்டிக் கேட்பவர்களை கட்டி உரிக்கிறது பாசிசம் என்றனன் மடையன்.
சமூக நீதி,, மொழி உரிமை இன உரிமை, மாநிலத்தின் தனி உரிமை என்று பேசினாலும் திராவிட மாடல் பெயரைக் கொண்டு கார்ப்பரேட் சுரண்டலுக்கு துணை நிற்பதால் திமுக நமக்காகாது என்று கண்ணாடியை சரி செய்து கொண்டார் பரமார்த்த குரு.
தமிழகத்தில் பாசிஸ்டுகளை அறிமுகப்படுத்தியதே திமுகதான் அதற்கு பழி வாங்காமல் பாசிசத்தை எதிர்க்க கூடாது என்று திரும்பிக் கொண்டார் குரு.
குற்றவியல் சட்டம் முதல் ஊடகங்களை முறைப்படுத்தும் சட்டங்கள் வரை கடும் சட்ட திட்டங்களை விதித்து கருத்துரிமைக்கு கல்லறை கட்டுகிறது பாசிசம் என்று பகர்ந்தபடியே வந்தனன் பேதை.
காந்தி காலத்தில் இருந்து ராகுல் காந்தி காலம் வரை கார்ப்பரேட்டுகளுடன் சமரசமாகவும், பார்ப்பனியத்துடன் ஒத்திசைவாகவும் செல்லும் காங்கிரசை நம்பத்தகாது என்றார் மோட்டு வாயை தடவிய பரமார்த்த குரு.
காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி மாற்றல்ல என்றார் தரையில் காலை உதைத்தபடியே குரு
மாநில உரிமைகளை பறித்து எதிர்ப்பவர்களை சிறையில் அடைத்து போராடுபவர்களை துப்பாக்கியால் துளைத்து, ஊடகங்களை மிரட்டி பணிய வைத்து கொக்கரிக்கிறது பாசிசம் என்றபடியே வந்தான் மூடன்.
மாநில உரிமை, மண்ணுரிமை, தன்னுரிமை என்றபடி எல்லாம் பேசி இனவாத அரசியலில் மூழ்கி வர்க்க நலனை கைவிடும் தேசிய இன விடுதலை போராளிகளை நம்பினால் பயனிலை என்று கைகட்டி நின்றார் பரமார்த்த குரு. அடையாள அரசியல் முதல் கார்ப்பரேட் அரசியல் வரை எதனுடனும் ஒன்று சேர்க்காதே என்றே மொழிந்தார் குரு.
மட்டி, மடையன், பேதை, மூடன், மண்டு உள்ளிட்ட ஐவரும் இணைந்தனர். குருவே பாசிசம் கழுத்தை நெரிக்கும் தருணத்தில் எதிரியை எதிர்த்து நிற்பதை காட்டிலும் நண்பர்களை நம்பாதீர்கள் என்கிறீர்களே என்னே இது காலக்கொடுமை?
பாசிசம் உள்ளே புகுந்து விடும் என்று பிதற்றும் மடையர்கள் பேச்சைக் கேட்டு புரளிகளை கிளப்பாதீர்!
தினவெடுத்த தோள்களையும், திரண்ட புஜத்தையும், அகண்ட மார்பையும் கொண்டு நேருக்கு நேர் வீதியில் விரட்டி அடிப்பதே வீரம் இதனை புரிந்து கொண்டோர் பாசிச எதிர்ப்பாளர்கள்!
புரியாதவர்கள் துரோகிகள் பிடி சாபம் ஏவினார் பரமார்ந்த குரு.
Comments
Post a Comment