நாட்டின் அரசியலை பிரதிபலிக்கும் JNU. பாகம் 1.

இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். (JNU) முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய அரசியலில் தோன்றும் பல்வேறு விதமான அரசியல் போக்குகள் அனைத்தும் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பிரதிபலிக்கும் என்பதுதான் இதன் சிறப்புத் தன்மை.


நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்ற அரசியல், பொருளாதார, பண்பாட்டு கருத்துக்களை முன்னறிந்து கூறுவதற்கு JNU எப்போதும் தயாராகவே உள்ளது.

பாசிச அபாயத்தை அது தோன்றும் காலகட்டத்திலேயே முன்னறிந்து முன்வைத்தவர்கள் மாணவர்கள்.


2016 ஆம் ஆண்டு எமது இணையதளம் செய்தியாளர்கள் JNU மாணவர்களுடன் நடத்திய நேர்காணல் மற்றும் கட்டுரை தொகுப்புகளை புதிய வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.


வினை செய் ஆசிரியர் குழு.


JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ?


செய்தியாளர் குழு ஜே.என்.யு சென்று திரும்பி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. அப்போது கண்ணையா குமார் சிறையிலும் உமர் காலித், அனிர்பான் உள்ளிட்ட தோழர்கள் தலைமறைவாகவும் இருந்தனர். நாங்கள் திரும்பி வந்ததற்கு இடைப்பட்ட நாட்களில் கண்ணையா பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார். தலைமறைவாக இருந்த உமர் காலித் உள்ளிட்ட தோழர்கள் சரணடைந்து பின் அவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். தற்போது கண்ணையா குமார் மீது அபராதமும், உமர், அனிர்பான் மீது தற்காலிக நீக்கமும், இன்னம் 14 மாணவர்கள் மீது அபராதமும் விதித்துள்ளனர். பல்கலையின் உயர்மட்ட விசாரணைக் குழு இந்த அறிவிப்பைச் செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பை கடுமையாக கண்டித்திருக்கின்றனர்.


சிறையில் இருந்து விடுதலையான கண்ணையா குமாரின் உரையின் மேல் பலரும் பலவாறாக பொருள் விளக்கம் எழுதி விட்டனர். அவரது உரையில் இருந்து ஒரு சில பகுதிகளை இங்கே சுட்டிக் காட்டுவது இந்த இறுதிக் கட்டுரையின் பேசு பொருளுக்கு நெருக்கமானதாக இருக்கும் என்று கருதுகின்றோம்.


“எனது சிறை அனுபவத்திலிருந்து சிலவற்றைச் சொல்ல நினைக்கிறேன்.

இது எனது சுயவிமரிசனம். ஒரு வேளை நான் சொல்லப் போவது உங்களுக்கும் பொருந்தும் என்று கருதினீர்களென்றால் அதே உணர்வோடு புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஜே.என்.யுவைச் சேர்ந்த நமது உரையாடல்கள் வடிகட்டப்பட்டு தூய்மையானதாகவும், நாகரீகமானதாகவும் உள்ளன. ஆனால் நாம் சாதாரண மக்களுக்குப் புரியாத சிக்கலான வார்த்தைகளைக் கொண்டு நமது வாதங்களைக் கட்டமைக்கிறோம். இது மக்களின் தவறல்ல. அவர்கள் நேரிடையானவர்கள். நேர்மையானவர்கள். நிச்சயம் அவர்களால் விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். நம்மால் தான் அவர்களுக்கு விசயங்களை எளிமையான முறையில் விளக்க முடியவில்லை”


”எனக்கு ஏ.பி.வி.பியினர் மேல் எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில், வெளியில் இருக்கும் ஏ.பி.வி.பியினரை விட வளாகத்திற்குள் இருக்கும் ஏ.பி.வி.பியினர் பகுத்தறிவு மிக்கவர்கள்”


“எனது உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஏ.பி.வி.பி நண்பர்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சுப்பிரமணியம் சுவாமியை இங்கே அழைத்து வாருங்கள். நாங்கள் அவரோடு விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்”


ஜே.என்.யு பேசும் அரசியலும் – வெகு மக்களும்


கண்ணையா குமாரின் உரையிலிருந்து சுட்டப்பட்ட மேற்கோள்களில் இறுதியாக உள்ளவைகளை முதலில் தெளிவுபடுத்திக் கொள்வோம்.


ஜே.என்.யுவில் தற்போது நடந்து வரும் மொத்த சர்ச்சைகளுக்கும் வித்திட்ட பிப்ரவரி 9ம் தேதி நிகழ்வுகளின் சூத்திரதாரியே ஏ.பி.வி.பி தான். அப்சல் குரு அநியாயமாக தூக்கிலிடப்பட்ட பின் ஒவ்வொரு வருடமும் ஜே.என்.யு வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஏ.பி.வி.பி அறியாத ஒன்றல்ல. எனினும், இந்த ஆண்டு திட்டமிட்ட ரீதியில் வெளியிலிருந்து ரவுடிகளையும் பார்ப்பன ஊடகங்களையும் அழைத்து வந்ததோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தவர்களும் ஏ.பி.வி.பியினர் தான்.


ஜே.என்.யு என்றில்லாமல் ஜே.என்.யு விவகாரத்தைத் தொடர்ந்து நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கருத்துரிமைக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல்களை ஏ.பி.வி.பி கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஜனவரி மாதம் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ”தி வயர்” இணையப் பத்திரிகையின் ஆசிரியரான சித்தார்த் வரதராஜன் நிகழ்த்த இருந்த உரையைத் தடுத்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா படுகொலை, கண்ணையா குமாரை அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது, தில்லி மதரசா மாணவர்கள் சிலரை “பாரத் மாதா கீ ஜேய்” சொல்லுமாறு கட்டாயப்படுத்தி கொலை வெறித்தாக்குதல் நடத்தியது, ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஜே.என்.யு பேராசிரியர் நிகழ்த்த இருந்த உரை ஒன்றைத் நிர்வாகத்தின் துணையோடு தடுத்தது, ஜே.என்.யு பேராசிரியர்கள் நிவேதிதா மேனோன், பாணினி உள்ளிட்டோரை தேச துரோகிகளாக சித்தரித்துக் கொண்டிருப்பது – இது கடந்த சில மாதங்களில் மட்டும் ஏ.பி.வி.பி தீவிரவாத கும்பல் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதல்களின் ஒரு சிறிய பட்டியல் தான்.


கருத்து சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின் மேல் வெறி நாய்களைப் போல் பாய்ந்து பிடுங்கிக் கொண்டிருக்கும் ஏ.பி.வி.பியினரை நோக்கிய கன்னையா குமாரின் அணுகுமுறையைப் புரிந்து கொள்வதற்கு அவரது உரையின் முதல் பகுதியை விளங்கிக் கொள்வது அவசியம்.


மக்கள் அரசியல் vs ஜே.என்.யு அரசியல்:


மாணவர் சங்கங்களின் அரசியல், பொதுவாக பல்கலைக்கழகங்களின் அரசியல் போக்குகள் மற்றும் குறிப்பாக ஜே.என்.யுவின் அரசியல் விவகாரங்களை கடந்த பல ஆண்டுகளாக உன்னிப்பாக கவனித்து வரும் ஜே.என்.யுவில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் ஒருவரிடம் உரையாடினோம்.


“தோழர், தில்லியில் உள்ள இரண்டு முக்கிய பல்கலைக்கழகங்களில் செல்வாக்கு செலுத்தும் அரசியல் போக்குகள் குறித்து சொல்லுங்கள்”


”தில்லி பல்கலைக்கழகத்தில் எப்போதும் ஏ.பி.வி.பிக்கும் காங்கிரசின் என்.எஸ்.யு.ஐக்கும் நேரடியான போட்டி இருக்கும். இந்தப் போட்டிகளில் ஏ.பி.வி.பி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது. தில்லி பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவர்கள் சங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே செல்வாக்கிழந்து விட்டன”


“தில்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி பெற்று வரும் வெற்றியை எப்படிப் புரிந்து கொள்வது?”


”தில்லி பல்கலைக்கழகத்திற்கும் ஜே.என்.யு.விற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முதலில் விவாதச் சூழல். இங்கே எமது அரசியல் விவாதச் சூழலில் இடதுசாரி அரசியலுக்கு மிக முக்கியமான இடமுண்டு. அதே போல் இந்த வளாகத்தின் கலாச்சாரத்தில் ஐரோப்பிய பாணி லிபரல் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. தில்லி பல்கலைக்கழகத்தின் சூழல் வேறு. பெரும்பாலும் நிலவுடைமைச் சமூக சூழலில் இருந்து வரும் மாணவர்கள் தில்லி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பின்னும் பெரிதளவில் கலாச்சார தளத்தில் மாறுதலுக்கு உள்ளாவதில்லை. தனது பிற்போக்கான கருத்து நிலைகளை எந்த மாற்றமும் இன்றி தொடர தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எந்த தடைகளும் இருப்பதில்லை. மேலும், பல்கலைக்கழக தேர்தல்களை ஏ.பி.வி.பியும் சரி காங்கிரசு சங்கமும் சரி, சாதி கணக்குகளின் அடிப்படையிலேயே அணுகுகின்றன. குஜ்ஜார் மற்றும் ஜாட் சாதியினரின் நன்மதிப்பை பெறும் சங்கங்கள் சுலபத்தில் வெற்றி பெற்று விடலாம். ஏ.பி.வி.பி தில்லி பல்கலைக்கழக தேர்தல்களில் தொடர்ந்து வென்று வருவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்”


”சரி, ஜே.என்.யு வளாகத்தில் ஏ.பி.வி.பியின் செல்வாக்கு எப்படி உள்ளது? வெளியே ஊடகங்களின் கருத்துப்படி பார்த்தால் ஜே.என்.யு ஒட்டுமொத்தமாக இடதுசாரிகளின் கோட்டை என்றாகிறது…”


”இந்த வளாகத்தை இடதுசாரிகளின் கோட்டை என்று பீற்றிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த செப்டெம்பரில் நடந்த மாணவர் தேர்தலில் மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் ஏ.பி.வி.பியினர் 11 இடங்களில் வென்றுள்ளனர். நான்கு முக்கிய இடங்களுக்கான போட்டியில் ஒன்றில் ஏ.பி.வி.பி வென்றுள்ளது. இந்த வெற்றிகளின் பின்னே அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுக்கள் கிடைத்துள்ளது என்பதையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்”


”எனினும், ஜே.என்.யுவின் பாரம்பரியத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தற்போது இந்துத்துவ பாசிஸ்டுகள் ஜே.என்.யுவின் மேல் தொடுத்திருக்கும் தாக்குதல்களை எதிர்கொள்வதைப் பொருத்தமட்டில் இந்த வளாகம் ஒரே அணியில் நின்று அவற்றை எதிர் கொள்கிறது என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா?”


“அப்படியும் சொல்ல முடியாது. தற்போதைய பிரச்சினையில் இங்கே உள்ள ஊழியர்கள் சங்கம் (Non teaching Staff association) ஏ.பி.வி.பிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே போல், வளாகத்தில் தோட்ட வேலை மற்றும் இதர உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சங்கம் ஏ.பி.வி.பி நடத்திய பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்”


“இடதுசாரி மாணவர்களுக்கு தொழிலாளர்களே ஆதரவு தரவில்லையா? கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கிறதே? நீங்கள் அவர்களோடு எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லையா?”


”தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்ல முடியாது. ஊழியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை நாங்கள் தான் அவர்களுக்கு போராடிப் பெற்றுக் கொடுத்தோம். அதே போல் தொழிலாளிகளின் கூலிப் பிரச்சினைகளுக்கும், இங்கே உள்ள தாபாக்களுக்கு வழங்கப்படும் மானியத்திற்காகவும் நாங்கள் போராடி இருக்கிறோம்”


“நான் கேட்பது வேறு. பொருளாதார கோரிக்கைகள் தவிர்த்து அவர்களோடு அரசியல் ரீதியான தொடர்புகளை நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்களா? அல்லது அவர்களை அரசியல் ரீதியில் வென்றெடுக்க முயற்சித்துள்ளீர்களா?”


நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த தோழர் ஒரு கணம் திகைத்து பேசுவதை நிறுத்தினார்.

அருகிலிருந்த மற்ற தோழர்களும் அவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சில நிமிட அமைதிக்குப் பின்,


”அவ்வாறான ஒரு தேவை இருப்பதையே நாங்கள் இது வரை பரிசீலிக்கவில்லை என்பது தான் உண்மை.. சொல்லப் போனால் நாங்கள் அந்த துறையில் தோற்றுவிட்டதாகவே எடுத்துக் கொள்ளலாம்”


”சரி நீங்கள் அவ்வாறான ஒரு உரையாடலுக்கு முயற்சிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.. ஆனால், உழைக்கும் வர்க்கம் என்ற முறையில் இவர்கள் இடதுசாரி மாணவர் சங்கங்களுக்கே நெருக்கமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா. எப்படி ஏ.பி.வி.பிக்கு ஆதரவான நிலையை அவர்கள் எடுக்கிறார்கள்?”


”உண்மை தான். ஆனால் நீங்கள் அவர்களது கோணத்திலிருந்து பார்க்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமைச் சமூகப் பின்னணியில் இருந்து வருகின்றவர்கள். அவர்களது வருமானத்தைக் கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு முறையான பள்ளிக் கல்வி அளிப்பதற்கே போராட வேண்டும். பெரும்பாலும் அவர்களது பிள்ளைகள் பள்ளி இறுதியோடு படிப்பிலிருந்து விலகிக் கொள்பவர்களாக இருப்பார்கள். இங்கே வளாகத்தில் மாணவர்களின் உலகமோ வண்ணங்களால் நிறைந்தது. ஆராய்ச்சி மாணவர்கள் தாபாக்களில் அமர்ந்து மணிக்கணக்கில் விவாதங்களில் ஆழ்ந்திருப்பார்கள். அவை அனைத்தும் அரசியல் விவாதங்கள் என்று சொல்ல முடியாது – பல நேரங்களில் தங்களது ஆராய்ச்சிகள் குறித்தும் கூட பேசிக் கொள்வார்கள். அடுத்து மாணவர்களின் அரசியல் செயல்பாடுகள்.


இதையெல்லாம் பார்க்கும் தொழிலாளர்களும் ஊழியர்களும் என்ன நினைப்பார்கள்? படிப்பதற்காக அரசு செலவு செய்யும் காசையெல்லாம் தின்று தீர்த்து விட்டு இப்படிக் கூத்தடிக்கிறார்கள் என்றே அவர்களுக்குத் தோன்றும். ஆனால், மாணவர்களின் படிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளுமே கூட சமூக அடிப்படைகளில் இருந்தும் அது சார்ந்த செயல்பாடுகளில் இருந்துமே கிளைத்தெழுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. இங்கே பொலிடிகல் சயன்ஸ், அறிவியல் துறை, சமூகவியல் துறை, சட்டம் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அரசியல் பேசுவம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிக இயல்பானது தானே?


இப்போது யோசித்துப் பார்க்கும் போது, எமது அரசியல் செயல்பாடுகள் இதே மக்கள் அங்கம் வகிக்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கானதே என்பதை அவர்களுக்கு விளங்கச் செய்யும் முயற்சிகளில் தவறி விட்டோம் என்று புரிகின்றது. அந்த வகையில் அடித்தட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பேசுவதில் இருந்து நாங்கள் மிகவும் விலகி இருக்கிறோம்”


”இந்த விவகாரங்களுக்குப் பின் வளாகத்திற்குள் ஏ.பி.வி.பியின் நிலை எப்படி இருக்கும்?”


”சொல்லப் போனால் மோடியும் அமித்ஷாவும் அவசரப்பட்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏ.பி.வி.பி வளர்ந்து வந்த வேகத்தைப் பார்த்தால் அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் அவர்கள் வளாகத்தில் அசைக்க முடியாத அரசியல் சக்திகளாக வளர்வதற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன. ஆனால், பா.ஜ.க அவரசப்பட்டு மூக்கை நுழைத்ததில் வளாகத்திற்குள் ஏ.பி.வி.பி தனிமைப்பட்டு விட்டது”


”அப்படியென்றால் ஏ.பி.வி.பியின் வளர்ச்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ள அதே நேரம், எதிகாலத்தில் அவர்கள் வளர்வதற்கான சமூக அடிப்படை அப்படியே இருக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமா?”


“முழுமையாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில், இப்போது எழுந்திருக்கும் விவாதத்தின் போக்கில் அந்த சமூக அடிப்படை சர்வ நிச்சயமாக உடைந்து போவதற்கான எல்லா சாத்தியங்களும் எழுந்து வருகின்றன. ஏ.பி.வி.பியின் சில முன்னணியாளர்களே அமைப்பிலிருந்து விலகிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா”


மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் ‘ஜெண்டில்மேன்’ அரசியல் குறித்த கண்ணையா குமாரின் சுயவிமரிசனத்தை இவ்விடத்தில் மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகின்றோம். உண்மையில் இடதுசாரி அரசியல் என்பதற்கும் மக்களுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?


தொடரும்….

Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.