பாசிச பாஜகவை எதிர்த்து தெருவில் நடக்கும் எமது போராட்டங்கள்!

“பாசிச பாஜகவை தோற்கடிப்போம்! இந்தியாவை ஆதரிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் கடந்த ஐந்து மாத காலமாக பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது.

நாடு முழுவதும் கார்ப்பரேட் காவி பாசிச சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்ற சூழலில் தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவோம் என்று நாங்கள் முன்வைத்த போது அதன் அனைத்து பரிமாணங்களையும் ஆய்வு செய்தே முடிவு செய்திருந்தோம்.

தேர்தலுக்கு வெளியில்தான் பாசிச பாஜகவையும், கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் வீழ்த்த முடியும் என்பதில் எமக்கு குழப்பமோ, ஐயங்களோ எதுவும் இல்லை. நாட்டின் பெரும்பான்மை மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட தருணத்தில் தேர்தல் அரசியலை முன்வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போது வெறுமனே புறக்கணிப்பு என்று சொல்லிக்கொண்டு தனது குட்டி முதலாளித்துவ வர்க்க வாழ்க்கை குலையாமல் வீட்டில் இருந்து கொண்டே செயல்படுவது பொருத்தமானது அல்ல என்று முடிவெடுத்தோம்.

நாங்கள் தேர்தல் பற்றி எமது நிலைப்பாடுகளை அறிவித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் பல்வேறு இடங்களில் போலீசின் அடக்குமுறைகளையும், மிரட்டல்களையும், பாசிச பாஜகவின் குண்டர் படையினரின் மிரட்டல்களையும் சலம்பல்களையும் எதிர்கொண்டு தெருவில் நின்றுதான் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

பாசிச பாஜக என்று பேசவே கூடாது என்று கோவையில் இந்து மத வெறி குண்டர்கள் தொடர்ந்து எமது பிரச்சாரத்தை தடுத்து வருகின்றனர்.

எமது அமைப்புகளின் சார்பில் பிரச்சாரத்தை துவங்கினாலே ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக குண்டர் படையினர் நேரடியாக பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்து கைகலப்பில் இறங்குகின்றனர். அவர்களை எதிர்த்து விரட்டியடிப்பதற்குள் திட்டமிட்டபடியே போலீஸ் வந்துவிடுகிறது. பிறகு எமது பிரச்சாரத்தை நிறுத்த சொல்லி உத்தரவிடுகிறது. அதுவும் பாசிச பாஜகவின் தமிழக தலைவரான திருவாளர் அண்ணாமலை அங்கு போட்டியிடுவதால் போலீசு மற்றும் பாஜக குண்டர் படையின் அதிக்கிரமங்கள் தலை விரித்தாடுகிறது. 

நீலகிரி மாவட்டத்திலோ ஆர் எஸ் எஸ் பாஜகவினர் படுகர்கள் மத்தியில் தங்களுக்கு ஓட்டு வங்கி இருப்பதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் “ஒரே நாடு! ஒரே கடவுள்!” என்ற கொள்கையின் அடிப்படையில் பார்ப்பன கடவுளர்களான ராமனையும் கிருஷ்ணனையும் மட்டும்தான் வழிபட வேண்டும். இதற்கு தடையாக உள்ள நாட்டார் தெய்வங்களையும், குல தெய்வங்களையும் வழிபடுவதை தடுத்து நிறுத்த போகிறார்கள்,” என்று பிரசுரம் போட்டதையே சாக்காகக் கொண்டு பொதுக்கூட்ட அனுமதியை மறுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளாக பணி புரிகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவாளர்கள் தேர்தல் விதிகள் என்ற பெயரில் ஏதாவது ஒரு சொத்தை காரணத்தை முன்வைத்து எமது அமைப்புகளின் பிரச்சாரத்தை தடுக்கின்றனர் அல்லது அனுமதி கொடுக்க மறுக்கின்றனர்.

தேர்தலில் பிரச்சாரம் செய்யும் ‘ஜனநாயக உரிமைகளை’ மறுக்கின்ற அரசு அதிகாரிகளின் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகங்கள் வரை அனைத்து இடங்களிலும், அதிகார வர்க்கத்தினர் அனைவரிடமும் தொடர்ச்சியாக போராடித்தான் ஒரு சில இடங்களில் அனுமதியைப் பெற்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.

நாட்டின் அரசியல் பொருளாதார பண்பாட்டு நிலைமைகளை அவதானிக்க திராணியின்றி எல்லா காலகட்டங்களிலும் எந்த ஆட்சி வடிவத்தில் ஆளும் வர்க்கம் அடக்குமுறை ஏவினாலும் எங்களது கொள்கை தேர்தல் புறக்கணிப்புதான் என்று அறிவித்துவிட்டு, சொகுசாக வீட்டில் படுத்து உறங்குபவர்களுக்கு இது போன்ற எந்த சிக்கல்களும் இல்லை. இணையதளத்தில் தங்களது மேதாவித்தனமான கருத்துக்களை பேசி வெளியிடுவது, ஈ போஸ்டர்களில் முழக்கங்களை தெறிக்க விடுவது, அடையாளத்திற்கு ஒன்று இரண்டு இடங்களில் அனுமதி கேட்டு மறுத்தவுடன் அதை பிரம்மாண்டமாக ஊதி பெருக்குவது போன்ற எளிமையான வழிமுறைகளில் தேர்தலுக்கு வெளியில் ‘பாசிச பாஜகவை வீழ்த்துவதற்கு’ செயல்படுகின்றனர்.

ஆனால் எங்கள் நிலைமை அவ்வாறு இல்லை. தேர்தலில் ‘பாசிச பாஜகவை தோற்கடிப்போம்’! என்று பிரச்சாரம் செய்வதற்கு மேற்கண்ட அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுகின்ற துணிவும், அரசியல் திராணியும் வேண்டும்.

மற்றொருபுறம் பாசிச பாஜகவை தேர்தலில் தோற்கடிப்பதற்கு மக்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை கொண்டு வரும் வகையில் லட்சக்கணக்கான பிரசுரங்களை வெளியிட்டுள்ளோம். நூற்றுக்கணக்கான தெருமுனை கூட்டங்களையும், ஆலைவாயிற் கூட்டங்கள் முதல் பேருந்து பிரச்சாரம் தெருமுனைப் பிரச்சாரம் அரங்க கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் மாநாடு என்று பல்வேறு வழிகளில் தொடர்ந்து எமது பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறோம்.

இத்தகைய பாசிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கும், செயல்பாடுகளுக்கும் பரந்துபட்ட உழைக்கும் மக்களை சார்ந்தே செயல்படுகிறோம். ஆனால் எமது அமைப்பின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத திண்ணைப் பேச்சு வீரர்கள் திமுகவிடம் விலை போய் விட்டோம் என்று பொய் செய்திகளை பரப்பி அவதூறு செய்கின்றனர்.

இத்தகைய அவதூறுகள் மற்றும் பாசிச பாஜக குண்டர்களின் எதிர் தாக்குதல்கள், போலீசின் அடக்குமுறைகள் போன்றவற்றின் மூலம் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருபோதும் முடக்கி விட முடியாது.

உழைக்கும் மக்களின் பேராதரவுடன் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துகின்ற வரையில் எமது போராட்டம் தொடரும்….

சண். வீரபாண்டியன்.


Comments

Popular posts from this blog

‘ஓட்டுப் பொறுக்கிகளும்!’ ‘வெடிகுண்டு’ புரட்சியாளர்களும்!

”ஓட்டுப் பொறுக்கிகளும்,” ”வெடிகுண்டு புரட்சியாளர்களும்!”… பாகம்-2.

“ஓட்டுப் பொறுக்கிகளும்,” “வெடிகுண்டு புரட்சியாளர்களும்” பாகம்-4.